டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், புதிதாக அணை கட்ட கேரள மாநிலம் ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தந்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

  


முதல்வர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:


  ""மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி எழுதிய கடிதத்தில், "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பான வழக்கின் விசாரணை அக்டோபர் 20-ம் தேதி நடைபெறுவதாக உள்ளது. இந்தச் சூழலில், இந்தப் பிரச்னை குறித்து கருத்து கூறுவது நீதிமன்றக் கண்டனத்துக்கு உரியது. எனவே, கேரள அரசுக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்குவதற்கு முன்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும்' என்று கூறியிருந்தேன்.

  ஆனால், தமிழக அரசுக்கு இன்று கிடைத்துள்ள செய்தியின்படி, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான முன்னோடி ஆய்வை நடத்த கேரளத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் அனுமதி அளித்து விட்டதாகத் தெரிகிறது.

  இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் அனுமதிக்கு உடனடி தடை வழங்கக் கோரி வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் கருணாநிதி.

ஒன்று இரண்டானது:  தமிழக அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்கிறது.

  முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முதலில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "அணையில் 136 அடி முதல் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம்' என்று தமிழகத்துக்கு சாதகமாகத் தீர்ப்பு கூறியது.

  இந்தத் தீர்ப்பை மதிக்காத கேரள அரசு தனது சட்டப் பேரவையில் அதிரடியாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

  "முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்க இயலாது' என்ற கேரள சட்டப் பேரவை தீர்மானம் இயற்றியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது தமிழகம்.

  நிலுவையில் உள்ள வழக்கு...  இந்த வழக்கு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், மேலும் ஒரு வழக்கை தமிழக அரசு தொடுக்க நேர்ந்துள்ளது.

  முல்லைப் பெரியாறு அணையில் முழு அளவு தண்ணீர் தேக்கினால், அணையில் உடைப்பு ஏற்படும் என்றும் அதனால் கேரளத்துக்கு பலத்த உயிர்ச் சேதமும், உடைமைச் சேதங்களும் ஏற்படும் என்றும் கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

  இந்த அச்சத்தைப் போக்க நீரியல் நிபுணர்கள், கட்டுமான நிபுணர்களைக் கொண்டு அணைப் பகுதியில் ஆய்வு நடத்தத் தமிழக அரசு ஒத்துழைத்தது. கேரளத்தின் அச்சத்தில் தமிழக அரசும் உரிய வகையில் பங்கெடுத்துக் கொண்டது. அதே சமயம் தமிழ்நாட்டின் தேவைகளுக்குக் கூடுதல் நீர் பெற அணையில் முழு அளவு இல்லாவிட்டாலும் 142 அடி வரையிலாவது தண்ணீர் தேக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.

  இந்த நிலையில்தான் இந்த அணைக்கு வரும் நீரின் அளவைக் குறைக்கும் வகையில் இன்னொரு அணையை (பேபி டேம்) கட்டுவது என்ற முடிவைக் கேரளம் எடுத்திருக்கிறது. இதற்காக சர்வே நடத்த மத்திய அரசிடம் காதும் காதும் வைத்ததுபோல அனுமதி கோரி அதில் வெற்றியும் பெற்றுவிட்டது. இந்த அனுமதியை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  மத்திய அரசு அனுமதி அளித்ததாக வந்த செய்திகளைத் தமிழக அரசு முதலில் மறுத்தது. "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்காது' என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.

  ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ, "முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்காக கேரளத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதிக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்' என்று அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

  இதற்கு விளக்கம் அளித்த தமிழக அரசு, ""மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு ஆதாரம் இருந்தால் அதைக் காட்டுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியிருந்தது.

  இப்போது அந்த ஆதாரம் கிடைத்துவிட்டதால் நீதிமன்றம் செல்வதென்ற முடிவைத் தமிழக அரசே எடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------------------------------------
பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்றுவிட்டோம்,இனி நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்ற ஆணவத்தில் அகம்பாவத்தில் காங்கிரஸ் கட்சி நடந்து கொல்கிறது.நன்றி மறந்து போய் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றது. திமுக ஏன் இன்னும் மத்திய அரசுடன் கூட்டணி வைத்து இருக்க வேண்டும்.

கூட்டணி தர்மத்திற்காக ஒரு முறை கூட கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது.காங்கிரஸில் இருந்து விலகுவதுதான் நல்லது. கூட்டணியிலிருந்து திமுக விலகி செல்லட்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.வெளியே செல்லுங்கள் என்று சொல்லாமல் சொல்கின்றனர்.

பெருந்தலைவருக்கு பெரு அவமானம். இனியும் தேவையா அவமானங்கள் ?.

இது குறித்து சில தினங்களுக்கு முன்பே 'அம்மா' அவர்கள் 'இனியும் தாமதிக்காமல் திமுக அரசு மத்திய அரசில் இருந்து வெளியே வர வேண்டும்' என்று சொன்னார்கள். இது நிறைவேற வேண்டும்.

தற்போது வடமாநிலங்களில் நடைபெறப் போகும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவ வேண்டும்.அது போல் தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்து தேர்தல் நடத்தி அதிமுகவோ அல்லது திமுகவோ ஆட்சிக்கு வரவேண்டும்.நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தோற்றது போல காங்கிரஸ் தோற்க்கப்படவேண்டும்.காங்கிரசுக்கு ரிவிட் அடிக்க வேண்டும். தக்க பாடம் புகட்ட வேண்டும்.

Posted by போவாஸ் | at 11:44 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails