தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு ரூ. 100 கோடி



மிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களின் துயரங்களை உடனடியாக களைய அரசின் சார்பில் ஒட்டுமொத்தமாக ரூ. 100 கோடி நிதி ஒதுக்க தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிவுகள் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்புகள்:



"தமிழகத்தில் பல்வேறு முகாம்களிலும் உள்ள 5 ஆயிரத்து 982 குடியிருப்புகளை பழுதுபார்த்து புதுப்பிக்கும் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும்.


முகாம்களில் குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படும். புதிய கழிவறைகள் கட்டப்படும். மேலும், பழைய கழிவறைகள் பழுது பார்க்கப்படும்.


புதிய கழிவுநீர்க் கால்வாய்கள் சீரமைத்து, மின்கம்பங்கள் மற்றும் தெரு விளக்குகள் அமைக்கப்படும். வீடுகளில் உள்ள மின் இணைப்புகளும் பழுது பார்க்கப்படும். இந்தப் பணிகள் ரூ. 37.33 கோடி செலவில் செய்யப்படும்.


காப்பீட்டுத் திட்டம் விரிவு...  தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் உள்ளவர்கள் மாதாந்திர பணக் கொடையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.


எனவே, தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்த ரூ. 1 கோடி ஒதுக்கப்படுகிறது.


தமிழக மக்களுக்கு வழங்கப்படுவது போல, அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க ரூ. 4.54 கோடி ஒதுக்கப்படுகிறது.


தமிழகத்தில் உள்ள ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டம், இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இதற்காக ரூ. 2.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ரூ. 4.1 லட்சம் செலவிடப்படும்.


கல்லூரிகளில் பயின்று வரும் முகாம் வாழ் மாணவர்கள் 354 பேருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இதற்காக ரூ. 8 லட்சம் ஒதுக்கப்படும்.


முதல் கட்டமாக மொத்தமாக ரூ. 45.40 கோடியில் முகாம்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.


மீதமுள்ள ரூ. 54.60 கோடி தொகை இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புதிதாக காங்கிரீட் வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும்.


இலவச செயற்கை உடல் உறுப்பு உபகரணங்கள், உதவித் தொகையுடன் கூடிய பள்ளிக் கல்வி, மூன்று சக்கர கையுந்து ஆகியவையும் வழங்கப்படும்.


தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் நல வாரிய குடும்பங்களில் ஈமச்சடங்குக்காக வழங்கப்படும் நிதியுதவி ரூ. 2,500, தமிழகத்தில் அகதிகளுக்கும் வழங்கப்படும்.


முகாம் வாழ் தமிழர்கள் வெளி மாவட்டங்களுக்குச் சென்று திரும்ப இயலாத நிலை ஏற்பட்டால் பணக் கொடை வழங்கும் நாளில் அவர்கள் முகாமுக்கு வந்து அதை பெற்றுக் கொள்ள சிறப்பு அனுமதி வழங்கப்படும். அரசு வழங்கிய தெளிவுரைகளின் படி, ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. அதில், இப்போதுள்ள விதிமுறைகள் தளர்த்தப்படுகிறது.


முகாம் பொறுப்பு வட்டாட்சியரின் பரிந்துரை மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு ஏற்ப திருத்திய தெளிவுரைகள் வழங்கப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்

நேரம் கடந்த முடிவாக இருந்தாலும்,, இப்பொழுதாவது தமிழகத்தில் உள்ள அகதிகளை தமிழர்களாக ஏற்றுக்கொண்டு உதவி செய்ய முன் வந்திருக்கிறது. சந்தோசமே. அதே நேரத்தில் 100 கோடி ஒதுக்கீடு செய்ததில் வேறு யாரும் ஒதுக்கி விடாமல் நேர்மையாக, உண்மையாக அரசின் திட்டங்களும், சலுகைகளும், உதவிகளும் சென்றிட வேண்டும். குறை ஏதும் ஏற்படாவண்ணம் செயல் படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்களில் வேளை வாய்ப்பு பெற்றிடவும் அரசு உதவி செய்ய வேண்டும்.

Posted by போவாஸ் | at 2:08 PM | 0 கருத்துக்கள்

தொ‌ழில‌திப‌ர்களை ‌வி‌ஞ்‌சிய 10 வயது சிறுவன்

abdul gani
தொ‌ழில‌திப‌ர்க‌ள் பலரு‌ம், பல வருட அனுபவ‌ங்களை‌ப் பெ‌ற்று ‌பி‌ன்‌ பல ‌நிறுவன‌ங்களை ‌நி‌ர்வ‌கி‌க்கு‌ம் ‌‌திற‌ன் பெறுவ‌ர். ஆனா‌ல், ஒரு 10 வயது ‌‌சிறுவ‌ன் த‌ற்போதே 2 பெ‌ரிய ‌நிறுவன‌ங்களை ‌ந‌ி‌ர்வ‌கி‌க்‌கிறா‌ன் எ‌ன்றா‌ல் ந‌ம்ப முடி‌கிறதா?


மலேசியாவை சேர்ந்த சிறுவன் அதிபுத்ரா அப்துல் க‌னிதா‌ன் நா‌ம் சொ‌ல்லு‌ம் தொ‌ழில‌திபராவா‌ர். இவனுக்கு த‌ற்போது 10 வயது தான் ஆகிறது. இ‌ப்போதே இவ‌ன் 2 கம்பெனிகளுக்கு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறான்.


வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கும் 2 கம்பெனிகளை அவன் தாயார் நடத்தி வருகிறார். இந்த கம்பெனிகளுக்கு அவனை தலைமை அதிகாரியாக அவன் தாயார்தா‌ன் நியமித்து இருக்கிறார். ஏதோ கெளரவ‌‌த்‌தி‌ற்காகவோ, சொ‌த்து ‌சி‌க்கலு‌க்காகவோ அவனை இ‌ந்த பத‌வி‌யி‌ல் ‌நிய‌மி‌க்க‌‌வி‌ல்லை.


உ‌ண்மை‌யிலேயே அவ‌ன் பெ‌ற்று‌ள்ள அ‌தீத திறமை‌யி‌ன் காரணமாக தான் அவன் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறான். தொழில்துறையில் அவன் பல நுணுக்கங்களை அறிந்தவனாகவு‌ம், ப‌ல்வேறு வா‌‌ய்‌ப்புகளை உருவா‌க்குபவனாகவு‌ம் ‌‌திக‌ழ்‌கிறா‌ன் அ‌ப்து‌ல் க‌னி. இ‌ந்த ஒரே காரண‌த்‌தி‌ற்காக‌த்தா‌ன் அவனை அவனது தாயா‌ர் இந்த பதவிக்கு நியமி‌த்து இரு‌க்‌கிறா‌ர் எ‌ன்று அ‌றியு‌ம் போது ஆ‌ச்ச‌ரிய‌ம் மே‌லிடு‌கிறது.


அவனது ‌திறமையை அவன் தாயார் மட்டும் அறிந்து இருக்கவில்லை. அ‌ந்த ‌நிறுவன‌த்‌தி‌ல் ப‌ணியா‌ற்றுபவ‌ர்களு‌ம் கூட திறமையை மதி‌க்‌கி‌ன்றன‌ர். அவனது ‌திறமையோடு போ‌ட்டி போட முடியாது எ‌ன்று கூறு‌கி‌ன்றன‌ர்.


இதோடு போக‌வி‌ல்லை அவனது புக‌ழ். அ‌ந்த ‌சிறுவ‌னி‌ன் ‌திறமை ப‌ற்‌றி அ‌றி‌ந்த பல பல்கலைக்கழகங்கள் அவனை தங்கள் மாணவர்களுக்கு சிறப்புரை நிகழ்த்துவதற்காக அழை‌க்‌கி‌ன்றன. இதற்காக அவனுக்கு ஒரு மணி நேரத்துக்கு 65 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளி‌க்கவு‌ம் மு‌ன்வ‌ந்து‌ள்ளன பல ப‌ல்கலை‌க்கழக‌ங்க‌ள்.


தொ‌ழி‌லி‌ல் ம‌ட்டும‌ல்லாம‌ல், இதுபோ‌ன்று ‌சிற‌ப்புரை ஆ‌ற்றுவ‌திலு‌ம் ஒரு மாத‌த்‌தி‌ற்கு பல ல‌ட்ச‌ங்களை குவ‌ி‌த்து வரு‌கிறா‌ன் அ‌ப்து‌ல் க‌னி.

Posted by போவாஸ் | at 1:47 PM | 1 கருத்துக்கள்

கரையும் மலைகள்

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகளின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. அமைச்சர்கள் மேற்பார்வையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்தாலும், 40-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு என்ன ஆறுதல் கூறிவிட முடியும்!


அதிக அளவு மழை பெய்திருப்பதை நிலச்சரிவுக்கு ஒரு காரணமாகக் கூறினாலும், இதை இயற்கையின் பேரிடர் என்பதைக் காட்டிலும், மானுடத்தின் பிழை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.


1994-ல் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில், மரப்பாலம் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவின் போதே, இதற்கான காரணங்களையும், இனிவரும் காலங்களில் எத்தகைய அணுகுமுறை மூலம் இதைத் தவிர்க்க முடியும் என்பது குறித்தும், பல்வேறு அமைப்புகள் கருத்துத் தெரிவித்த பிறகும், அது குறித்து எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றால் வேறு என்னதான் சொல்ல முடியும்?


நீலகிரியில் நிலச்சரிவு என்பதே 1970-க்குப் பிறகுதான் சிறிய அளவில் ஏற்படத் தொடங்கியது.


நீலகிரியில் உள்ள குன்றுகள் அனைத்துமே முழுக்கமுழுக்கப் பாறைகளால் அமைந்தவை அல்ல. பெரும்பாலான குன்றுகள் கால்பங்கு பாறை, முக்கால் பங்கு மண்ணாக இருப்பவை. சில இடங்களில் பாறைகள் பாதி, மண் பாதி கலந்து நிற்கிறது. அந்தந்தக் குன்றுகளில் உள்ள பாறை, மண் விகிதம் மற்றும் கடல்மட்டத்தின் உயரத்துக்கு ஏற்ப தனக்கான தாவரங்களையும் மரங்களையும் நீலகிரி மலை தனக்குத்தானே வளர்த்து செழித்திருந்தது - திப்பு சுல்தானிடமிருந்து பிரிட்டிஷ் அரசின் கைக்கு மாறும்வரை.


பிரிட்டிஷ் அரசின் அன்றைய கோயமுத்தூர் கவர்னர் ஜான் சலைவன் இந்த மலைக்கு முதலில் சென்ற பிரிட்டிஷ் அதிகாரி. மலையின் அழகும், அதன் குளுமையும் பிடித்துப்போனதால், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கான கோடை வாசஸ்தலமாக மாற்றினார். சென்னை ராஜதானியின் பிரிட்டிஷ் அதிகாரிகள் வருவதற்காகவே மலை ரயில் பாதை (இரு தண்டவாளங்களுக்கு இடையே பல்சக்கரங்களுடன் ஒரு தண்டவாளம் இருக்கும் வகையில்) அமைக்கப்பட்டது. கவர்னர் சலைவனின் இந்த ஊடுருவலை மலைவாழ் மக்களான படுகர், தோடா இனத்தவர் எதிர்த்தனர். அந்தப் பழங்குடி மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றுதான் தனது விருப்பத்தை அவரால் நிறைவேற்ற முடிந்தது.


கோடை வாசஸ்தலம் என்பதோடு, இங்கே தேயிலை பயிரிட முடியும் என்பதையும் கண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக காடுகளை அழித்தனர். இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த மலையின் பாறை - மண் கலப்புத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் கிடைத்த இடங்களையெல்லாம் தேயிலைத் தோட்டம் அமைப்பதற்காகக் காட்டை அழித்தனர்.


1970-களில் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்ததால் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டம் அமைக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. எத்தகைய மழையிலும் வேர்களால் மண்ணைப் பிடித்துக் காத்துநின்ற மரங்களும் புல்வெளிகளும் அழிக்கப்பட்டபிறகு, மழையில் வெறும் மண் கரைந்தது. நீர் ஊறி, ஓதம் தாளாமல் மண்முகடுகள் சரிந்து, மனிதர்கள் இறப்பது வாடிக்கையானது. நீலகிரியின் பல்லுயிர்ப்பெருக்கம் (பயோ டைவர்சிட்டி) முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.


தேயிலைத் தோட்டங்களுக்காக மலை அழிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, சுற்றுலாத் தலமாக மாறியதால் பயணிகள் எண்ணிக்கை பலநூறு மடங்கு அதிகரித்தது. இவர்களுக்காக காடுகள் மறைந்து, கட்டடங்கள் முளைத்தன. உதகை, குன்னூர் இரண்டு இடங்களில் மட்டும் சுமார் 500 விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் உள்ளன. சரியான கழிவுநீர் வாய்க்கால்கூட உதகை, குன்னூரில் இல்லை என்பது சிக்கலை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.


1994 மரப்பாலம் நிலச்சரிவின் போதே, தொலையுணர் தொழில்நுட்பத்தின் மூலம் மலையின் தன்மையையும், காட்டின் அளவையும் கண்காணித்து, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது தொலையுணர் தொழில்நுட்பத்தில் பலபடிகள் முன்னேறியுள்ள நமக்கு, நீலகிரி மலைகளின் வகைகளையும், எத்தகைய காடுகள் அங்கே இருந்தால் நிலச்சரிவு ஏற்படாது என்பதையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும்.


ஆக்கிரமிப்பாலும், காடு அழிப்பாலும் முற்றிலும் மாறிக்கிடக்கும் "ஒத்தக் கல் மண்டூ' என்கிற உதகமண்டலம், குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைகளில் மழை பெய்தால், எந்தெந்தப் பகுதிகள் வழியாக மழை நீர் கீழே இறங்குகிறது என்பதைக் கண்டறிந்து, தேவையான இடங்களில் நீர் வெளியேற வாய்க்காலும், மண்கரையாமல் இருக்கக் காடுகளும் வளர்க்க முயல வேண்டும்.


பாறையின்றி மண்மேடுகள் மட்டும் இருக்கும் பகுதிகளில் வீடுகள் கட்டத் தடை விதிப்பதும், போக்குவரத்து வசதி என்ற பெயரில் நீலகிரியில் புதிய சாலைகள் அமைப்பதைக் கைவிடுவதும்கூடப் பயன்தரும்.


நீலகிரி மலையில் சமவெளியாகப் பரந்து கிடக்கும் புல்வெளிகூட, தன் வேர்களால் அந்த மண்மலையைத் பிடித்துக் காத்து நிற்கிறது என்பதைப் புரிந்து கொண்டால்தான், மலையரசி "கரையாமல்' நிற்பாள்; மனிதரையும் அழ வைக்க மாட்டாள்.
நன்றி:தினமணி

Posted by போவாஸ் | at 11:13 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails