ஜெ. ஆட்சிக்கே வரமாட்டார்: தேமுதிக தேராத கட்சி: மு.க.அழகிரி கிண்டல்



ஜெயலலிதா இனி ஆட்சிக்கே வரமாட்டார் என்றும், தேமுதிக தேராத கட்சி என்றும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை இன்று (நேற்று) மதுரையில் அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள். மு.க.அழகிரியும் அவர்களுக்கு வாழ்த்து கூறினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: 2011 சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

பதில்:
 நான் ஏற்கனவே இது குறித்து கூறியிருக்கிறேன். 20011 பொதுத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணிதான் அமோக வெற்றி பெறும். 200 இடங்களில் வெற்றி பெறுவோம். தென் மாவட்டங்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலை போல 100 க்கு 100 சதவீதம் அல்லது 95 சதவீதம் தி.மு.க. அணி வெற்றி பெறும்.


கேள்வி: பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது சந்தேகம் என்று கூறியிருந்தீர்களே?

ப.
 அப்போது சொன்னேன். அதற்காகத்தான் தேர்தலை தள்ளி வைக்க சொல்லி உள்ளார்கள். ஒரு இடைத்தேர்தலை அறிவிக்கும்போது அந்த மாநிலத்தின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் அரசிடம் கருத்து கேட்டுதான் தேர்தல் தேதியை அறிவிப்பார்கள். ஆனால் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது. தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு கட்டுப்பட்டு தி.மு.க.வும், காங்கிரசும் தேர்தல் பணிகளை தொடங்கியது.


ஆனால் அ.தி.மு.க. தேர்தலை தள்ளி வைக்க சொல்லி வற்புறுத்தியது. அதன்படி தேர்தலை தள்ளி வைத்துள்ளனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா அ.தி.மு.க. உறுப்பினராக இருப்பாரோ என்று சந்தேகம் உள்ளது.
 
கேள்வி: கடந்த இடைத்தேர்தல் முடிவுகள் இயற்கையானது அல்ல என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

பதில்: 
 எப்போதும் உள்ள புலம்பல்தான் அது. ஏற்கனவே அவர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தின் பட்டன் சரியில்லை என்றார்கள். இப்போது பட்டனை சரிசெய்து விட்டல்லாவா தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும்.


கேள்வி:அ.தி.மு.க.வில் இருந்து மேலும் சில தலைவர்கள் தி.மு.க.வுக்கு வருவார்களா?

பதில்: 
நிச்சயமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.


கேள்வி: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் களில் தே.மு.தி.க. 2 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து விட்டதே. உங்கள் கருத்து என்ன?

பதில்:
 ஏற்கனவே அது தேறாத கட்சிதான். கட்சியின் பெயரே வாயில் நுழையாதபடி உள்ளது. தேய்ந்த தேறாத கட்சியாக அது உள்ளது.


கேள்வி: கோவை செம்மொழி மாநாடு பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:
 தலைவர் நினைத்ததை முடிக்காமல் விடமாட்டார். கடந்த 1967 ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் உலக தமிழ் மாநாட்டை சிறப்பாக நடத்தி தந்தவர் தலைவர் கலைஞர். அதுபோல செம்மொழி மாநாட்டையும் சிறப்பாக நடத்தி காட்டுவார். மாநாடு முடியும் வரை அவர் இரவு  பகலாக தூங்கமாட்டார்

நன்றி:நக்கீரன்.

Posted by போவாஸ் | at 1:38 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails