‘சிறிலங்கா’வின் இனவெறி அரசியல்

சிறிலங்க நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து தற்போது அந்நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவுள்ள சரத் பொன்சேகாவை நிறுத்துவது என்று எதிர்க்கட்சிகள் கூட்டணி முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள் தென் இலங்கைக் கட்சிகளின் சிங்கள இனவெறி அரசியலிற்கு அத்தாட்சியாகும்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரித்து, அதற்கு எதிராகத்தான் சிறிலங்க அரசு போர்த்தொடுத்துள்ளது என்று உலக நாடுகளை நம்பவைத்து, இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் தமிழினப் படுகொலையை நடத்தி முடித்ததை தனது ‘வெற்றி’யாகக் கொண்டாடிய அதிபர் ராஜபக்சாவும் அவருடைய சகோதரர்களும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான தங்களது வெ(ற்)றியை தேர்தல் வெற்றியாக மாற்றிக் கொள்ளும் தீவிரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ராஜபக்சாவின் தேர்தல் வெற்றியைத் தடுத்து நிறுத்த, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ததில் முன்னணியில் நின்ற இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை வேட்பாளராக்குவதன் மூலம் சிங்கள பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெரும் வியூகத்தை எதிர்கட்சிக் கூட்டணி வகுத்துள்ளது.


சிறிலங்க அரசியலில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், அந்நாட்டு முன்னாள் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்கே, ஆளும் சிறிலங்க சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ள மகிந்தாவின் வெற்றியைத் தட்டிப் பறிக்க வகுத்த தேர்தல் வியூகமே சரத் பொன்சேகாவை அதிபர் வேட்பாளராக நிறுத்துவது என்பதாகும்.
ரனில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்க முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்க மக்கள் சுதந்திரக் கட்சியின் தலைவர் மங்கள சமரவீரா ஆகிய கட்சிகள் தலைமையிலான கூட்டணி சரத் பொன்சேகாவை வேட்பாளராக்குவதில் ஒருமித்த கருத்து கொண்டுள்ளன.


சரத் பொன்சேகா வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஆதரிக்கத் தயார் என்று ஈழத் தமிழர்களுக்கு எந்த உரிமையும் அளிக்கக் கூடாது என்று வெளிப்படையாக அரசியல் நடத்திவரும் ஜனதா விமுக்தி பெரமுணா என்றழைக்கப்படும் பொதுவுடமைக் கொள்கை கொண்ட கட்சியும் (!), புத்த பிக்குகளின் அரசியல் அமைப்பான ஜாதிக ஹேல உருமயாவும் அறிவித்துள்ளன.


“சிறிலங்க சிங்கள மக்களின் தேசம்தான். இதனை இங்கு வாழும் தமிழர்கள் உட்பட மற்ற இனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களே. ஒப்புக் கொண்டால் இருக்கலாம், இல்லையேல் வெளியேறலாம்” என்று ஊடகங்களுக்கு வெளிப்படையாகப் பேட்டியளித்தவரல்லவா சரத் பொன்சேகா! பிறகு அவரை விட சிறந்த சிங்கள இனவெறியாளரை எங்கு போய் இந்த எதிர்க்கட்சிகள் தேட முடியும்? எனவே ஆளும், எதிர்க் கட்சிகளைக் கொண்ட இரண்டு கூட்டணிகளுமே முன்வைக்கும் முக்கிய தேர்தல் முழக்கம் ஈழத் தமிழர்களை அழித்தொழித்த இனப் படுகொலைப் போரில் பெற்ற வெற்றிக்காக ‘பெரும்பங்காற்றிய’ இவருக்கு வாக்களியுங்கள் என்பதே! இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்கள வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை யாருக்கு அளிப்பது என்பதை, தமிழர்களுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றிக்கு காரணகர்த்தா யார்? என்பதை ‘சீர்தூக்கிப் பார்த்து’ வாக்களிக்க வேண்டும்.


போர் முடிந்துவிட்டது, இதற்குமேல் சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல் சட்டப் பூர்வமான உரிமைகள் அளித்து, இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் அமைதியுடனும், முழு உரிமையுடன் வாழும் சமூகத்தை உருவாக்குவேன் என்றோ, போரினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள சிறிலங்கப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அனைத்துச் சமூகங்களும் ஒன்றிணைந்து பாடுபட வழிகாண்போம் என்றோ இலங்கைத் தேர்தலில் பிரச்சாரம் நடக்கப்போவதில்லை.


மாறாக, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை இனப் படுகாலையால் ஒடுக்கி அவர்களை உள்நாட்டிலேயே அகதிகளாக்கிய அதிபர் மகிந்தா ராஜபக்சவா அல்லது தமிழர்களை ஈவிரக்கமின்றி கொத்துக் கொத்தாக அழித்துக் கொன்ற சிங்களப் படைகளை வெறிப் பேச்சுப் பேசி வழி நடத்திய தளபதி சரத் பொன்சேகாவா என்று தீர்மானியுங்கள் என்று தேர்தல் பிரச்சாரம் நடக்கப்போகிறது.
இப்படி தமிழர்களை தனிமைப்படுத்தி, அவர்களின் சமூக வாழ்வை சிதைத்து, மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையின் மூலம் இனப் படுகொலை செய்து, சொந்த மண்ணிலேயே தமிழர்களை அனாதையாக்கி, முள்வேலி முகாம்களில் அடைத்து பெற்ற வெ(ற்)றிக்கு காரணகர்த்தா நான்தான் என்று ஒரு பக்கம் மகிந்தாவும், மறுபக்கம் சரத் பொன்சேகாவும் முழங்கப்போகின்றனர். தமிழர்களை ஒழித்துக்கட்டியதில் யார் சிறந்தவர் என்றத் ‘தேர்வை’ பெரும்பான்மை சிங்களச் சமூகம் தேர்தல் தினத்தன்று வெளிப்படுத்தப்போகிறது.


தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை கண்டுகொள்ளாமல், வெற்றி பெற்று அதிபராகும் அடுத்த சிங்கள இனவெறியாளரை பன்னாட்டுச் சமூகமும் பாராட்டும். யார் பாராட்டத்தவறினாலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் தொலைபேசியில் அவரை அழைத்து வாழ்த்துவார். வாழ்த்தியதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார், இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களும் சம உரிமையுடன் வாழ, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை உருவாக்கி நடைமுறைப்படுத்தும்படி, அடுத்த இனவெறி அரசை தலைமையேற்று நடத்தப்போகும் இவர்களில் ஒருவரை கேட்டுக் கொள்வார்!


இதுதான் சிறிலங்காவின் ஜனநாயகம்! அங்கு பெரும்பான்மை சிங்களர்கள் வாக்களித்து தேர்வு செய்யும் எந்த ஒரு சிங்கள இனவெறியனும் அதிபர் ஆகலாம். உலகமும் அதனை செயல்படும் ஜனநாயகம் (Functioning Democracy) என்று பட்டம் சூட்டி, அதன் கையில் தமிழினத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை ஒப்படைக்கும்.


இப்படிப்பட்ட ஒரு வெறிக் கூத்தில் ஈழத் தமிழர்கள் பங்கேற்க வேண்டுமா? ஜனநாயகத்தின் பெயரால் அடுத்த சிங்கள இனவெறி ஆட்சியாளனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கேற்பதைத் தவிர்த்து, அதன் மூலம் தாங்ளுடைய சுய நிர்ணய உரிமைப் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை என்பதை உலகிற்கு ஈழத் தமிழினம் நிரூபிக்க வேண்டும்.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த பரிமாணம், சிங்கள தேசம் நடத்தும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்பதில் துவங்கட்டும். தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் உலக நாடுகளைச் சிந்திக்க வைக்கும் இந்த வழிமுறையும் ஜனநாயகமே. நன்றி:வெப்துனியா.

Posted by போவாஸ் | at 11:46 PM | 0 கருத்துக்கள்

காங்கிரசில் இணைந்தார் திருநாவுக்கரசர்

1977ம் ஆண்டு அதிமுக சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருநாவுக்கரசர். அவரை துணை சபாநாயகராக்கினார் எம்.ஜி.ஆர்.

பினனர் அவரை வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் அமர வைத்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளராகவும் திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதா, அதிமுகவின் தலைவியாக உருவெடுப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தவர் திருநாவுக்கரசர்.

இவரும், சாத்தூர் ராமச்சந்திரனுரம், ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களை தக்க வைக்க அவர்களை ஆம்னி பஸ்களில் ஏற்றிக் கொண்டு சுற்றியதை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், ஜெயலலிதா வழக்கம்போல் திருநாவுக்கரசரையும் ஒதுக்கினார். இதனால் வெறுத்துப் போன அவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.பின்னர் அதைக் கலைத்துவிட்டு அதிமுகவில் மீண்டும் இணைந்தார். பிறகு மீண்டும் அங்கிருந்து வெளியேறினார்.

கடைசியாக பாஜகவில் இணைந்தார். அவரை கப்பல்துறை இணையமச்சராக்கினார் வாஜ்பாய். ஆனால், 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட்டபோது திருநாவுக்கரசருக்கு சீட் தரக் கூடாது என்ற வினோதமான கண்டிசனைப் போட்டார் ஜெயலலிதா.

அதற்கு பாஜகவும் அடிபணிந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் சரியான அடி வாங்கின. அதிமுக முட்டை வாங்கியது.

இதையடுத்து திருநாவுக்கரசருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி தந்தது பாஜக. அவருக்கு தேசியச் செயலாளர் பதவியும் தந்தது.

ஆனால், வாஜ்பாயை அத்வானி கோஷ்டி ஒதுக்க ஆரம்பித்தது முதலே கட்சியில் தனது பிடிப்பை இழந்தார் திருநாவுக்கரசர்.

பாஜகவில் நடந்து வரும் கோஷ்டிப் பூசலால் திருநாவுக்கரசர் மனம் வெதும்பி்ப் போயிருக்கும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் சிலரை பதவி நீக்கம் செய்தார் கட்சியின் மாநிலத் தலைவரான இல.கணேசன்.

இதனால் அதிலிருந்து விலக திருநாவுக்கரசர் திட்டமிட்டார். இதையடு்த்து அவருக்கு மாநில அளவில் மிக முக்கிய பதவி தருவதாகக் கூறி இழுத்தடித்து ஏமாற்றிக் கொண்டே வந்தனர் பாஜக டெல்லி தலைவர்கள்.

அளவுக்கு மேல் ஏமாற்றத்தை சந்தித்துவிட்ட திருநாவுக்கரசர் பாஜகவுக்கு முழுக்குப் போட இறுதி முடிவு எடுத்தார்.

கடந்த செப்டம்பர் மாதத்திலேயே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ்,பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் என பலரையும் அவர் டெல்லியில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வந்தன.

இந் நிலையில் இன்று டெல்லியில் தமிழக காங்கிரஸ் விவகாரங்களுக்கான தலைவரான மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், பா.சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசி்ல் இணைந்தார். அப்போது தமிழக காங்கிரஸ் தைலவர் தங்கபாலுவும் உடனிருந்தார்.

விரைவில் மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தி அதில் தனது ஆதரவாளர்களையும் காங்கிரசில் இணைய வைக்கவுள்ளார் திருநாவுக்கரசர்.

இந்த பொதுக் கூட்டத்துக்கு ராகுல் காந்தி வரக் கூடும் என்கிறார்கள்.

பாஜக கோஷ்டிப் பூசலையே தாங்காத திருநாவுக்கரசர் கோஷ்டிப் பூசலில் உலக ரெக்கார்ட்டை தன் வசம் வைத்திருக்கும் காங்கிரசில் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

இவர் காங்கிரஸில் சேர்ந்தாலும் பெரிதாக ஒன்றும் சாதித்து விடப் போவதில்லை. காங்கிரசும் பலம் அடையப் போவதில்லை. தமிழக காங்கிரஸில் இன்னொரு புதிய கோஷ்டி ஒன்று உருவாவதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை.

Posted by போவாஸ் | at 6:58 PM | 1 கருத்துக்கள்

டாடாவின் நானோ வீடுகள்

Posted by போவாஸ் | at 3:18 PM | 0 கருத்துக்கள்

ஆன்மீக வியாபாரிகள்


ஒரு ஜென் குரு ஒவ்வொரு நாள் மதியமும் தூங்கி ஓய்வெடுப்பார். சீடர்கள் அவர் எழுந்ததும் ஏன் தூங்கினீர்கள் ஐயா என்று கேட்டார்கள். குரு விட்டுக் கொடுக்காமல், "நான் தூக்கத்தில் கனவுலகிற்குச் சென்று அங்கு இருக்கும் முன்னோர்களிடம் பாடம் கேட்டு வருகிறேன்" என்று சொன்னார்.

ஒரு வாரம் கழித்து வகுப்பில் ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கக் கண்டார். ஏன் தூங்கினாய்? என்று கேட்டதற்கு அவனும், "நான் தூக்கத்தில் கனவுலகிற்குச் சென்று முன்னோர்களிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தேன்" என்றான். குரு,"என்ன கேட்டாய்?" என்றார்.

சீடனும், "எங்கள் குரு தினமும் வருகிறாரா?" என்று கேட்டேன். அவர்கள், "நீங்கள் யாரென்றே தெரியாது என்கிறார்களே!?" என்றான்!

ஆன்மீக குரு சொல்வதையெல்லாம் கேட்டு ஆட்டுமந்தைக்கூட்டம் போல அவர்கள் பின்னால் செல்லாமல், அவரின் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன என்பதை உங்களுக்குள்ளே தேடிப்பாருங்கள். அவரின் வளர்ச்சிக்கு நீங்கள்தான் காரணம் என்பதை புரிந்துகொள்வீர்கள்.

ஒரே கடன் பிரச்சனை, குடும்பத்தில் நிம்மதியில்லை, உடலில் நோய் ஒன்று போனால் மற்றொரு நோய் வருகிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது, சர்க்கரை நோய் அதிகரிக்கிறது, மன நிம்மதியே இல்லை. மருத்துவரும் கை விரித்துவிட்டார். அடுத்து என்ன செய்வதென்றே தெரிய வில்லை என்பவர்கள் நிம்மதியான வாழ்விற்கு திரும்ப ஒரே வழி ஆன்மீகம். பக்தர்களுக்கு மட்டுமல்ல பக்தர்கள் வழிபடும் ஆன்மீக குரு நிம்மதியாக வாழ வேண்டும் என்றாலும் ஆன்மீகம் தான் ஒரே வழி. ஏனெனில் பக்தர்கள் அந்த குறிப்பிட்ட குருவிடம் செல்வதை நிருத்தி விட்டார்களானால் அந்த ஆன்மீக குருவும் நிம்மதியிழந்து, உடல் நோய்களெல்லாம் ஏற்பட்டு சராசரி பக்தனின் நிலையை அடைந்து இறந்து போவார். ஆன்மீக குரு மரம் என்றால் அதற்கு தேவையான நீர், உரம் எல்லாமே பக்தர்கள்தான். பக்தர்களை நம்பித்தான் ஆன்மீக குரு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் ஆன்மீக குருவை நம்பி பக்தர்கள் வாழ்வது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

அமைதியின் உறைவிடம்:

அங்கே நீங்கள் சென்றிருக்கின்றீர்களா! அருமையான இடம், அங்கு போனாலே மன நிம்மதியாக இருக்கும். மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் எவ்விதமான சத்தமுமில்லாமல் எவ்வளவு அமைதியான இருக்கும் தெரியுமா! என பக்தர்கள் சிலாகித்து பேசிக்கொள்வது வழக்கம். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, பொதுவாகவே எல்லா ஆன்மீக குருவிடம் இப்படி ஒரு இடம் அதாவது ஆசிரமம் இருக்கும். யாரும் கண்டு கொள்ளாத மலையடிவார இடமாகப்பார்த்து மொத்த இடத்தையும் வளைத்துப்போட்டு அற்புதமாக ஒரு அசிரமம் கட்டுவார். கொஞ்ச நாளைக்கு பிரபலமாகும் வரை சில ஆன்மீக சொற்பொழிவுகள், சில தியான முறைகள், அந்த தியான முறைகளால் நோய் தீர்ந்தவர்கள் என்ற சில பக்தர்களின் பேட்டிகள் இது போதும். அந்த ஆன்மீக குருவின் வம்சமே சந்தோஷமாக வாழும். பட்டம் விடும் போது குறிப்பிட்ட உயரம் செல்லும் வரை பட்டம் மேலே ஏறுவது கீழே இறங்குவதுமாக இருக்கும். குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் பட்டம் கீழே இறங்காமல் நிலையாக நின்றுவிடும் சிறுவர்கள் இதை மேல் காற்று என்பார்கள். அப்படித்தான் ஆன்மீக குருக்களின் வாழ்வும் கொஞ்சம் முயற்சி செய்து பிரபலமடைந்து விட்டால் போது அதற்கு பிறகு அவர் செய்ய வேண்டியது எதுவுமில்லை.

வியாபார வித்தை:

வியாபாரத்தை பெருக்குவது எப்படி என்று பல பல்கலைகழங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களே முழிபிதிங்கியிருக்கும் போது. இந்த ஆன்மீக குருக்கள் மிக எளிதாக வியாபாரத்தை செய்து முடித்துவிடுகிறார்கள். மிகச்சிறந்த எழுத்தாளரின் புத்தங்கள் கூட கனிசமான அளவே விற்பனையாகிறது. ஆனால் ஆன்மிக குருவின் உபதேசங்கள் அடங்கிய புத்தங்கள் பெருமளவு விற்று தீர்ந்துவிடுகிறது. புத்தகம் விற்பது, இவர்களின் புகைப்படம் விற்பது, இவர்களின் படம் இருக்கும் பேனா விற்பது, இவர்களின் சொற்பொழிவுகள் அடங்கிய ஆடியோ, விடியோ சிடிகள் என அனைத்தையும் எளிதாக விற்று காசு பார்த்துவிடுகிறார்கள். இது போதாதென்று இவர்களின் ஆன்மிகத்தன்மையை சந்தைப்படுத்துவதற்கென்று சிஷ்யக் குழுக்கள் உண்டு. இவர்கள் பல புதிய பக்தர்களை கூட்டி வருவதற்கும். ஆன்மீக குருவின் விற்பனைப் பொருற்களை விற்பதற்கும் பயன்படுபவர்கள். சமீபத்தில் ஒரு ஆன்மீக குருவின் சிஷ்ய குழு ஒன்றை சந்திக்க நேர்ந்தது. சிறிது நேரம் ஆன்மீகம் சம்பந்தமாக பேசிவிட்டு அவர்களுடைய தியான முகாமில் கலந்துகொள்ளச் சொன்னார்கள். நுழைவுக்கட்டணமாக ரூபாய் 700 செலுத்த வேண்டும் என்றார்கள். இப்படி எவ்வளவு 700 ரூபாய்க்கள்! இது தவிர வெளிநாட்டு பக்தர்கள் கொடுக்கும் பணம் என்று வாரி குவிக்கிறார்கள். இதற்கெல்லாம் வரியும் கட்டவேண்டியதில்லை காரணம் இவையெல்லாம் சேவை சார்ந்த அமைப்புகள். அடடா என்ன ஒரு ராஜ வாழ்கை, ராஜாவிற்குகூட சில பொருப்புகள் இருக்கும் இவர்களுக்கும் அதுவும் கிடையாது.

வார்த்தைகளின் சக்தி:

அவருடைய முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது தெரியுமா! அவருடைய கண்கள் அமைதியின் உருவமாக திகழ்கிறது. அவர் பேசும் போது எவ்வளவு நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக அனுபவித்து பேசுகிறார் என்று தெரியுமா! அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலே நம்முடைய மன பாரம் குறைந்துவிடும் என்று ஆன்மீக குருவை நேரில் கண்ட பக்தர்கள் சிலாகித்து சொல்வது வழக்கம். உழைக்காமல் குவிகிறது பணம் அதற்கு வரி பிரச்சனையில்லை, சொகுசான இருப்பிடம், நேர நேரத்திற்கு சத்தான உணவு வகைகள் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் அந்த ஆன்மீக குருவைப்போல பிரகாசமான முகத்தையும், எவ்வித அவசரமுமில்லாமல் ஒவ்வொரு வார்த்தையாக ரசித்து ரசித்து அமைதியாக பேச முடியும். எனவே மரம் பசுமையாக செழிப்பாக இருக்கிறதே என்று வாய் பிழக்க வேண்டாம். அதற்கு தேவையான நீரும் உரமும் எங்கிருந்து வருகிறது என்பதை ஆன்மீக குருவின் தோற்றத்தில் மயங்குபவர்கள் சிந்திக்க வேண்டும். ஆன்மீக குருக்கள் சொல்லும் தத்துவங்கள் எதுவும் புதிதல்ல ஏற்கனவே நாம் அறிந்த விசயங்கள்தான் அவற்றை புத்திசாளித்தனமாக மக்களை கவரும் விதத்தில் பேசுவது அவர்களின் திறமை. மற்றபடி விஷயம் ஏற்கனவே நாம் அறிந்ததுதான். நாம் உருப்பட வேண்டும் என்று விரும்பினால் நமக்கு தெரிந்த நல்ல விசயங்களை பின்பற்றினாலே போதுமானது.

நீரை நிருத்துங்கள்:

ஆன்மீக குருவிற்கு கொடுக்கும் பணத்தை நிருத்திப் பாருங்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட பொருற்களை கொள்முதல் செய்வதை உடனே நிருத்திப்பாருங்கள். அப்படி செய்தீர்களானால் ஆன்மிக குரு நிலைகுழைந்து போய்விடுவார். அதற்கு பிறகு அவரிடம் தத்துவம் பேச சொல்லிப்பாருங்கள். ஒரு தத்துவமும் அவருக்கு நினைவிற்கு வராது. விலைமதிப்பான ஆடைகள் அணிய முடியாது. சொகுசான கார்கள் வைத்துக்கொள்ள இயலாது, விமான பயணம் செல்ல முடியாது, சத்தான உணவு கிடைக்காது. கிட்டத்தட்ட ஒரு பிரச்சனைக்குறிய பக்தனின் முகம் எப்படி இருக்குமோ அந்த நிலமைக்கு அந்த ஆன்மீக குரு வந்துவிடுவார். பிறகு அவரை சரி செய்ய வேறொரு ஆன்மீக குரு வர வேண்டியிருக்கும். மோசமான பொருற்களை விற்று சம்பாதிப்பவனை வீட மோசமானவர்கள் இவர்கள் ஏனெனில் இவர்கள் அந்த மோசமான பொருற்களை கூட கொடுக்காமல் சத்தமில்லாமல் ரத்தம் உறுஞ்சும் அட்டைப்பூச்சியைப்போல மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு இருக்கும் பிரச்சனையில் நின்று யோசிக்க அவர்களால் இயலாது. பிரச்சனையில் இருந்து வெளியேறிவிட்டால் போதும் என்ற சிந்தனையில் அவர்கள் இருப்பதால். அவர்களால் இதை உணர முடியாது. சரி மக்கள் பணம் கொடுக்கிறார்கள் அதனால் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் அதோடு நிருத்திக்கொள்கிறார்களா தேடி வரும் பெண்களை கற்பழிப்பது, குழந்தைகளை பல காரணங்களுக்காக கொல்வது, கடத்துவது என பல அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறார்கள். யாராவது குற்றம் சாட்டும் வரை அனைவருமே நல்ல அன்மீக குரு போலத்தான் இருப்பார்கள். ஆன்மீக குருக்கள் உருவாக மக்கள்தான், மக்களின் பணம் தான் காரணம் அதை மக்கள் நிருத்த வேண்டும், திருந்த வேண்டும். பிறகு ஆன்மீக குருக்கள் தோன்ற மாட்டார்கள்.

முக்தியின் வழி:

உங்களின் அன்பிற்கினிய ஆன்மீக குரு இவ்வளவு சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் கொடுக்கும் பணம் மட்டுமே காரணமே தவிர வேறு எந்த தத்துவமும் காரணம் இல்லை. பணமே ஆதார தத்துவம் அவர்களுக்கு. அவர்களுக்கு பணம் கொடுப்பதைவீட அதை சேமித்து, குடும்பத்திற்கு போதுமான அளவு பணத்தை நீங்கள் சம்பாதித்தால் நீங்கள் தேடும் மன அமைதி, நிம்மதி எல்லாம் உங்கள் வீடு தேடி வரும் அதை விட்டு விட்டு நிம்மதியை தேடும் முயற்சியில் ஒரு சோம்பேறியை கோடிஸ்வரன் ஆக்காதீர்கள்.

Posted by போவாஸ் | at 3:00 PM | 1 கருத்துக்கள்

இடியட் இண்டியன்ஸ்... கோழைத் தமிழர்கள்!


டியட் இண்டியன்ஸ்... கோழைத் டமிலர்களே....’’ இப்படி ஆங்கிலத்திலும், சிங்களக் கடற்படையினர் கற்றுக் கொடுத்த அரைகுறைத் தமிழிலுமாக,  தடித்த வார்த்தைகளால் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்களைத் திட்டி, சிங்களக் கடற்படை வீரர்களுடன் இணைந்து விரட்டி அடித் திருக்கிறார்கள், சீன ராணுவ வீரர்கள்.


  இந்திய நாட்டையும், தமிழ் இனத்தையும் அவமானப்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்த மீனவர்கள், இந்த விஷயத்தை எப்படிச்  சொல்வது? யாரிடம் சொல்வது? சொன்னால் நம்புவார்களா? என்றெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியில், ‘இலங்கைக் கடற்படையில் சீன  வீரர்கள் இருக்கிறார்களா?’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விசாரித்து அறிக்கை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதன் பேரில், தங்களிடம்  விசாரிக்க வந்த மண்டபம் கடலோரக் காவல் படை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட மீனவர்கள் விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டார்கள்.

  அதைக் கேட்டு ரொம்பவே அதிர்ந்துபோன கடலோரக் காவல் படை அதிகாரிகள், அது குறித்து அந்த மீனவர்களிடம் மேலும் விரிவாக விசாரித்துச்  சென்றிருக்கிறார்களாம். தங்களது விசாரணையில் இலங்கைக் கடற்படை ரோந்துக் கப்பல்களில் சீன வீரர்கள் இருந்ததை உறுதிப்படுத்திக்கொண்ட  கடலோரக் காவல் படை அதிகாரிகள், ராமேஸ்வரம்

 பகுதி மீனவர்களை சிங்களக் கடற்படை சிப்பாய்களுடன் இணைந்துகொண்டு சீன சிப்பாய்களும்  அவமானப்படுத்தியதும் ‘முட்டாள் இந்தியர்களே’ என்றும், ‘கோழைத் தமிழர்களே’ என்றும் திட்டியதை ரிப்போர்ட்டாகத் தயார் செய்து, மத்திய பாதுகாப்பு  அமைச்சகத்துக்கு அனுப்பி இருக்கிறார்களாம்.

  இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு ‘ஷாக்’ ஆன நாம், உடனடியாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் உள்ள பலதரப்பட்ட மீனவர்களிடம் விசாரித்தோம்.  விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்பட்ட நிலையில் இருக்கும் மீனவர்கள் நம்மிடம் மனம் விட்டுப் பேசினார்கள்.

  ‘‘இலங்கையில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்குமான போர் முடிவுக்கு வந்த அடுத்த வாரமே, ‘சிங்களக் கடற்படையினர் கச்சத் தீவை சுத்தம் செய்கிறார்கள். அவர்களோடு சீன நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் இருந்தார்கள்’ என்பதை நாங்கள் கண்கூடாகப் பார்த்துவிட்டு  அப்போதே சொன்னோம். ஆனால், அதனை மத்திய_மாநில அரசுகள் காது கொடுத்தே கேட்கவில்லை. நாங்கள் ஏதோ இலங்கைக் கடற்பகுதியில் மீன்  பிடிப்பதை மறைக்கும் பொருட்டு பொய் சொல்கிறோம் என்றே இங்குள்ள அதிகாரிகளும் எங்கள் மேல் பாய்ந்தார்கள். தவிர, ‘சீன ராணுவத்தினர் கச்சத் தீவில்  இருப்பதை மீன் பிடிக்கச் சென்ற நீங்கள் பைனாகுலர் வைத்தார் பார்த்தீர்கள்?’ என்று எங்களை அதிகாரிகள் நக்கலடித்தார்கள்.

  ‘நாங்கள் பைனாகுலர் வைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அந்தப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த எங்களை, சிங்களக் கடற்படையினர் வ லுக்கட்டாயமாக கச்சத்தீவில் இறக்கி, மண்டிக் கிடந்த புதர்களை அகற்றக் கூறி மிரட்டினார்கள். அங்கே ராடார் அமைப்பதற்கான ஆரம்பகட்ட  வேலைகளை இலங்கைக் கடற்படை அதிகாரிகள் ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்குத் துணையாக, சப்பை மூக்குடன், குட்டையான உருவத்துடன்  ராணுவ உடையில் சீன வீரர்கள் சிலரும் நின்று கொண்டிருந்தார்கள்’ என்று எங்களை நக்கலடித்த அதிகாரிகளிடம் விளக்கினோம்.

  ஆனால், அவர்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி, மேல் நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டதன் விளைவு, சிங்கள மற்றும் சீன வீரர்களுக்கு  ரொம்பவே துளிர் விட்டுப் போய்விட்டது. தமிழக மீனவர்கள் கேட்க நாதியற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்து, ‘முட்டாள் இந்தியர்களே... கோழைத்  தமிழர்களே’ என்று நமது நாட்டு மக்களையும்,

தமிழ் இனத்தையும் கேவலமாகப் பேசும் அளவுக்கு சீன வீரர்கள் வந்து விட்டார்கள். அவர்களை அப்படிப்  பேசவைத்து, பேசக் கற்றுக் கொடுத்து நம்மையும், நம் நாட்டையும் அவமானப்படுத்துவதே சிங்களக் கடற்படையினர்தான்!’’ என்று ஆதங்கமும்,  இயலாமையும் வெடிக்கும் குரலில் நம்மிடம் கொட்டித் தீர்த்தார்கள், அந்த மீனவர்கள்.

   ‘‘முட்டாள் இந்தியர்களே’ என்றும், ‘கோழைத் தமிழர்களே’ என்றும் எந்தச் சூழலில் சீன வீரர்கள் திட்டினார்கள் என்பதை விவரிக்க முடியுமா?’ என்று  அந்த மீனவர்களிடம் கேட்டோம். அதனையும் நம்மிடம் விவரித்தார்கள்.
‘‘தீபாவளிக்கு முன்பு கச்சத்தீவு கடல் பகுதியில் நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அன்றைக்கு ‘பாடு’ நல்லவிதமாக இருந்தது. நல்ல விலை  மீன்கள் எங்களுக்குக் கிடைத்திருந்தது. அன்றைக்கு சந்தோஷமாகக் கரை திரும்பலாம் என்று நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோதுதான்,  சோதனையாக இலங்கைக் கடற்படை ரோந்துக் கப்பல் வந்தது. வழக்கம்போல் சிங்களக் கடற்படை வீரர்களுடன் ஏழு சீன வீரர்களும் இருந்தனர்.

  வழக்கம்போல் எங்களை சிங்கள மொழியிலும் தமிழிலுமாகத் திட்டிக்கொண்டே எங்கள் படகுகளில் இறங்கிய சிங்களக் கடற்படையினர், எங்கள் மீன் பிடி வலைகளை அறுத்தனர். எங்களை, அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியின் பின்பக்கத்தால் குத்தினர். பிறகு, விலை மிகுந்த மீன்களைப் பார்த்த  அவர்கள், அவ்வளவு மீன்களையும் தங்கள் கப்பலில் ஏற்றும்படி எங்களை மிரட்டினர். நடுக்கடலில் துப்பாக்கி முனையில் மாட்டிக்கொண்ட எங்களுக்கு  வேறு வழி? சிங்களக் கடற்படையினர் சொன்னபடியே செய்தோம்.

  கூடைகளில் மீன்களை சேகரித்து, கப்பலுக்குக் கொண்டு செல்லும்போது, எங்களில் சிலர் பேலன்ஸ் தவறி தடுமாறினார்கள். அதன் காரணமாக,  அங்கே நின்றுகொண்டிருந்த சீன வீரர்கள் மீது நாங்கள் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. உடனே கோபமும் அருவருப்பும் கொண்ட சீன  வீரர்கள் ‘இடியட் இண்டியன்ஸ்?’ என்று எங்களைத் திட்டினார்கள். பிடித்துத் தள்ளினார்கள்.

  அதனைப் பார்த்துக் கொண்டிருந்த சிங்களக் கடற்படையினர், சீன வீரர்களிடம் ‘நோ இண்டியன்ஸ். ஒன்லி தமிலியன்ஸ். பிரபாகரன்ஸ் ரிலேஷன்ஸ்!’  என்று கூறிவிட்டு, எங்களை சீன வீரர்கள் திட்டுவதற்காகத் தமிழில் ஒரு வார்த்தையை அப்போதே கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் கற்றுக் கொடுத்த  வார்த்தை, ‘கோழைத் தமிழர்கள்’. அதை அப்படியே எங்களைப் பார்த்து சீன வீரர்கள் சொன்னார்கள். அந்த வார்த்தையை அவர்கள் உச்சரிப்பில்,  ‘கோளை டமிலர்களே’ என்று சொன்னார்கள். எப்படிச் சொன்னால் என்ன? அவமதிப்பு அவமதிப்புதானே?’’ என்று பொருமித் தள்ளிய அந்த மீனவர்கள்,  திடீரென நினைவு வந்தவர்களாக,

‘‘சீன ராணுவம் அருணாசலப் பிரதேசம் வழியாகத்தான் ஊடுருவும் என்றோ, நம்ம நாட்டுக்குக் குடைச்சல்  கொடுக்கும் என்றோ மத்திய அரசும், உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகமும் நினைத்துக் கொண்டு, அங்கே மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்  பலப்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. இலங்கை ராணுவ உதவியுடன் சீன ராணுவம் நமது தென்கடல் பகுதியில் கடந்த மே மாதமே ஊடுருவிவி ட்டது’’ என்றவர்கள் இறுதியாக,

  ‘‘அருணாசலப் பிரதேசத்துக்குத் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றுவந்த நமது பிரதமர் மன்மோகன் சிங்குக்கே சீன  அரசு எச்சரிக்கையும், கண்டனமும்  தெரிவித்தது. நமது பிரதமருக்கே அந்த நிலைமை என்றால், நடுக்கடலில் சிங்கள _ சீன வீரர்களிடம் மாட்டிக் கொண்டு பரிதவிக்கும் எங்கள்  நிலைமையை நமது மத்திய _ மாநில அரசுகள் மனசாட்சியுடன் யோசித்துப் பார்க்கட்டும்’’ என்று விரக்தி ததும்பிய குரலில் குமுறித் தீர்த்தார்கள், அந்த  மீனவ மக்கள்.

  இந்நிலையில், கடந்த வாரம் தேவர் குரு பூஜை பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிடவும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும்  ராமநாதபுரம் வந்திருந்த தமிழக டி.ஜி.பி. ஜெயினிடம், மண்டபம் கடலோரக் காவல்படை அதிகாரிகளான கமாண்டன்ட் டி.எஸ்.ஷைனி, ஜானி,  ராஜேஷ்தாஸ் போன்றவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களிடம் தங்கள் குழு விசாரணை செய்ததையும், சிங்களக் கடற்படையில் சீன வீரர்கள் இருப்பதை  உறுதி செய்ததையும், மீனவர்களை அவர்கள் தடித்த வார்த்தைகளைக் கூறி அவமானப்படுத்தியதையும் விரிவாக எடுத்துக் கூறினார்களாம்.

  அதனைக் கேட்டு ரொம்பவே அதிர்ந்து போன டி.ஜி.பி. ஜெயின், உடனடியாக பசும்பொன் விசிட்டை கேன்சல் செய்துவிட்டு, மண்டபம் விரைந்தார். அ டுத்த இரண்டு நாட்களும் ஹோவர் கிராஃப்ட், மற்றும் மரைன் போலீஸாருக்கான ரோந்துப் படகிலும் சக அதிகாரிகளுடன் சர்வதேசக் கடல் எல்லை  வரை ரோந்து சென்றார், டி.ஜி.பி. ஜெயின். இதுதவிர, உச்சிப்புளி விமானப் படை ஹெலிகாப்டரிலும் சென்று இந்திய _ இலங்கைக்கு இடையேயான  சர்வதேசக் கடல் எல்லைப் பகுதிகளை ஆய்வு செய்துவிட்டே திரும்பி இருக்கிறார், டி.ஜி.பி. ஜெயின்.

  பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், ‘‘இலங்கைக் கடற்படையினருடன் சீன நாட்டு வீரர்களும் இணைந்து தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து  தாக்குதல் நடத்தி வருவது பற்றியும், அவமதிப்பது குறித்தும் விரிவான ரிப்போர்ட் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்படும். இலங்கையில் போர்  முடிவுக்கு வந்தாலும், கடல்வழிக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக, தமிழகக் கடல்பகுதி முழுவதும் பன்னிரண்டு மரைன்  ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. 24 ரோந்துப் படகுகளும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன’’ என்று கூறினார்.

  ‘‘டி.ஜி.பி. ஜெயின் இரண்டு தினங்கள் மண்டபத்திலேயே தங்கி இருந்து, ஹோவர்கிராஃப்டிலும், மரைன் படகிலும், ஹெலிகாப்டரிலுமாக ராமேஸ்வரம்  கடல் பகுதிகளை ஆய்வு செய்திருப்பது, தென்கடல் வழியாக நமது நாட்டிற்குக் காத்திருக்கும் பேராபத்தின் தீவிரத்தை உணரச் செய்கிறது. இதற்கெல் லாம் ஒரே தீர்வு, எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதுதான். அந்தத் திட்ட த்தால் மட்டுமே தென்கடல் பகுதி வழியாக எதிரிகள் ஊடுருவல் செய்வதையும் நமது மீனவர்கள் தாக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த முடியும்!’’ என் கிறார்கள், இந்தப் பகுதி குறித்து தெளிவாக அறிந்து வைத்திருக்கும் அந்தப் பகுதி மக்கள்.

நன்றி:குமுதம்

Posted by போவாஸ் | at 1:34 PM | 1 கருத்துக்கள்

Related Posts with Thumbnails