ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு மதிப்பெண் இனி 80 சதவீதம்


இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) சேர நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் அளவை 60 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம்.
                                                              



இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது தற்போது ஐ.ஐ.டி., மற்றும் ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. இது மாற்றப்பட உள்ளது. ஐ.ஐ.டி., மாணவர் சேர்க்கைக்கான தகுதி அளவை அடுத்த ஆண்டு முதல் மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 80 முதல் 85 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே ஐ.ஐ.டி., மற்றும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகள் எழுத தகுதி உடையவர்களாக அறிவிக்கப்படுவர். ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் குறைவாக உள்ளதால், இந்த நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது.



அதனால், ஐ.ஐ.டி., போன்ற முதன்மையான நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்விலும் அதிக அளவில் மதிப்பெண் பெற்றிருப்பதை உறுதி செய்ய உள்ளோம். வரும் 2011ம் ஆண்டில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வு, இந்த அடிப்படையில் தான் நடைபெறும். இந்த புதிய முறையை உருவாக்குவதற்காக ஐ.ஐ.டி., இயக்குனர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வுக்கு சரியாக எவ்வளவு தகுதி மதிப்பெண்களை நிர்ணயிப்பது என்பதையும் இந்த கமிட்டியே முடிவு செய்யும்.


ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கு பல மையங்கள் பயிற்சி அளிப்பதால், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதில் மாணவர்கள் அக்கறை காட்டுவதில்லை. நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என, தகுதி அளவு நிர்ணயித்தால் பல பயிற்சி மையங்கள் காணாமல் போய் விடும். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.


Updated News - தற்போதைய செய்தி :
கபில் சிபிலின் இந்த திடீர் முடிவால், நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அமைச்சர் கபில் சிபலுக்கு எழுதிய கடிதத்தில்,"அரசின் இந்த முடிவால், பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்கள், ஐ.ஐ.டி.,க்களில் சேர முடியாத நிலை ஏற்படும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அமைச்சர் கபில் சிபல் இந்த தகவலை நேற்று மறுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐ.ஐ.டி.,யில் சேர, நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் குறைந்தபட்ச மதிப்பெண்ணை உயர்த்தப் போவதாக வெளியான தகவல் உண்மை அல்ல. சில மீடியாக்கள் இதை தவறாக வெளியிட்டு விட்டன. கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.,) நடைமுறைகளில் மாற்றம் செய்வது குறித்து தான் பேசப்பட்டது. தகுதி மதிப்பெண் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மதிப்பெண்களை அதிகரிக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. இதில் நேரடியாகவே, மறைமுகமாகவோ தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted by போவாஸ் | at 8:25 PM

1 கருத்துக்கள்:

ISR Selvakumar said...

கல்வி விஷயத்தில் விரைவில் அரசியல் குழப்பங்கள் விலகி விடும் என்று நம்புகிறேன்.

சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், விவாத்தை துவக்கி வைத்திருக்கின்ற கபில் சிபலுக்கு பாராட்டுக்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails