"ஓ" போடுங்கள் : பாமகவின் பரிதாப நிலை.



திருச்செந்தூர், வந்தவாசி, சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட வில்லை என்பது பயந்து எடுக்கப்பட்ட முடிவு இல்லை. ஒரு பாராளுமன்ற தொகுதியிலோ, சட்டமன்ற தொகுதியிலோ கோர்ட்டு தீர்ப்பு மூலம் பதவி காலியானால் தவிர வேறு காரணங்களால் வெற்றிடம் ஏற்பட்டால் அந்த தொகுதியில் இருந்து பொது தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் எந்த கட்சியில் இருந்தாரோ அந்த கட்சிக்கே பதவி வழங்க வேண்டும். இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்பது பா.மக.வின் கொள்கை.


அதே போன்று தற்போது இடைத்தேர்தல் வெற்றியை பணம் தான் முடிவு செய்கிறது என்று முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபாலசுவாமி, தற்போதைய தேர்தல் அதிகாரி ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.


அதை தடுக்க அதிகாரம் இல்லை என்கிறார்கள். தேர்தல் முறைகேடுகளை தடுக்க முடியாத எந்திரமாக தேர்தல் ஆணையம் உள்ளது. பா.ம.க. இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு இவைகளும் காரணம்.


அதே போன்று தற்போதுள்ள மின்னணு எந்திரம், நம்பகத்தன்மை குறித்து நாடு தழுவிய நிலையில் சந்தேகம் உள்ளது. அதை போக்க எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில் தற்போதைய தேர்தல் அர்த்தமற்றதாகி விடுகிறது.


பா.ம.க. போட்டியிடா விட்டாலும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம். இடைத்தேர்தலில் பா.ம.க. வாக்காளர்கள், யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள். அதே வேளை, யாருக்கும் ஓட்டு போட வேண்டாம் என்று அங்கு பிரசாரம் செய்ய மாட்டோம்.


மின்னணு எந்திரம் சர்ச்சை இடைத்தேர்தலில் பணம் போன்ற பிரச்சினைகள் பொதுத் தேர்தலுக்குள் மாறிவிடும் என்று நம்புகிறோம். பொதுத் தேர்தலை புறக்கணிக்க மாட்டோம்.


இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
--------------------------------------


தமிழ், தமிழர், தமிழுணர்வு என்று சொல்லிக்க கொள்வது , முன்னேற்றத்திற்கு தடை போடுவது என்று செய்து , ஆளும் கூட்டணியில் இருந்ததால்தான் பரபரப்புக்கு இவரின் கருத்தை பிரசுரம் செய்து வந்தார்கள் என்பதை கூட உணரமறுத்து , தனக்கும் தார்மீக பொறுப்பு இருக்கும் பல பிரச்சனைகளில் கூட பொறுப்பில்லாமல் நடந்தும் மக்கள் நம்பிக்கையையும், சமுதாய மக்களின் நம்பிக்கையையும் இழந்தது, நாங்கள் இருக்கும் அணி தான் வெல்லும் என்று மார்தட்டிக் கொண்டு அலட்டலாக பேசிக் கொண்டிருந்த  பாமகவை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் இருந்த இடமில்லாமல் செய்து விட்டார்கள். தற்போது (பாட்டாளி) மக்களை "ஓ" போடச்சொல்லும் அளவுக்கு வந்திருக்கும் நிலைமை கொஞ்சம் பரிதாபம் தான். 
49 போட்டால் கூட, அதில் எவ்ளோ வாக்குகள் விழுகுதோ அது தான் பாமகவின் ஒட்டுவாக்கு வங்கி என்று எடுத்துக் கொள்ளமுடியும்.  பாமகவின் உண்மை செல்வாக்கு, பாமக ராமதாசின் பேச்சினை பாமகவினரே கேட்டனரா என்பது தேர்தல் முடிவு அன்று நிருபனமாகும்.


இந்த இடைத்தேர்தல் மட்டுமல்லாது, இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடாமல் இருந்தால், அதுவே தமிழக மக்களுக்கும், வன்னிய சமுதாயத்துக்கும் பாமக செய்யும் மிகப் பெரிய மகத்தான தொண்டு.


கலைஞர் ஐயாவும், ஜெயலலிதா அம்மாவும் சேர்க்காத பாமக கட்சி அரசியல் அநாதை என்று நிரூபணம் ஆகிறது. ஒரு கொள்கையுமில்லாமல், கோட்பாடுமில்லாமல் வீம்புக்காக தனித்து நிற்கும் விஜயகாந்த் "அரசியல் அனாதை" என்றால் என்ன என்பதை பாமக வை கண்டும் , தொடர் தோல்விகள் மூலம் மனத்தளர்ச்சி கொள்ளும் தன் கட்சியினரை தக்கவைப்பது என்பது குதிரைகொம்பான விஷயம் என்பதை வைகோ அவர்களை கண்டு உணரலாம். 


பத்திரிக்கைச் செய்திகளைப் பார்த்து அரசியல் நடத்தும், பத்திரிக்கைகளில் தினமும் வரவேண்டும் என்பதற்காக மட்டும் தினமும் அறிக்கை மேல் அறிக்கையாய் வெளியிடுபவர்கள், குறிப்பாக விஜயகாந்த் சிந்திக்க வேண்டும்.

Posted by போவாஸ் | at 11:56 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails