இந்த நாள்பற்றி இரு குறிப்புகள்


இந்த நாள்பற்றி இரு குறிப்புகள்
ஒன்று, இந்திய அரசமைப்புச் சட்டம் செய்து முடிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட நாள் (1949).
இரண்டு, இதே நாளில் தந்தை பெரியார் அவர்-களின் ஆணைப்படி திராவிடர் கழகத் தோழர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை தீயிட்டுக் கொளுத்திய நாள் (1957).
எதற்காகக் கொளுத்தப்பட்டது? இந்திய அரசமைப்புச் சட்டம் பச்சையாக ஜாதியைப் பாதுகாக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 13(2), 25(1), 29(1) (2), 368. இந்தப் பகுதிகள் பச்சையாக ஜாதியைப் பாதுகாக்கின்ற பகுதிகள். (அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதிபற்றி வருகிறது).
இவை அரசமைப்புச் சட்டத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு (3.11.1957) தனி மாநாட்டில் ஓங்கித் தீர்மானமாகக் குரல் கொடுத்தார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார்.
பிரதமர் நேருவோ சட்டத்-தைத் திருத்தவில்லை; மாறாக சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று சட்ட வல்லுநர்களைக் கொண்டு ஆராய்ந்தார்கள்.
என்ன ஆச்சரியம்!
சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே சரத்து இல்லை; மண்டையைப் பிய்த்துக் கொண்டார்-கள்.
அவசர அவசரமாக சென்னை மாநில அரசின் மூலம் ஒரு சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். தேசிய கவுரவம் அவமதிப்புத் தடுப்புச் சட்டம் (Prevention of Insult to National Honour Act-1957) என்று அதற்குப் பெயர். இதன்படி மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படலாம்.
தந்தை பெரியாரா, கருஞ்சட்டைத் தொண்டர்களா அஞ்சுவர்? எந்த நியாயமான உரிமைகளைப் பெறுவதாக இருந்தாலும், அதற்குரிய கஷ்ட நஷ்டம் என்னும் விலை கொடுக்கவேண்டும் என்பதுதானே தந்தை பெரியார் அவர்களின் கோட்பாடு!
1949 இல் சட்டம் நிறை-வேற்றப்பட்ட அதே நாளில், ஆம், இந்த நவம்பர் 26 நாளில் தான் (1957) பத்தாயிரம் திராவிடர் கழகத் தொண்டர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தினர்! கொளுத்தினர்!! சாம்பலை அமைச்சர்களுக்கு அனுப்பினர்! அனுப்பினர்!!
தந்தை பெரியார் முதல் நாளே கைது செய்யப்பட்டார். மூன்று குழந்தைகள் கூட ஈராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர்.
சென்னை ராஜ்ஜியத்தில் பழைய பரம்பரையைச் சேர்ந்த 2000த்துக்கும் மேற்பட்ட திராவிடர்கள் இந்தியக் குடியரசின் அரசியல் சட்டத்தைக் கொளுத்தியதற்காகக் கைது என்று அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ் எழுதியது.
சிறையில் சிலர் மாண்டனர்; சிறையிலேயே நோய்க்-குப் பலியாகி, வெளியில் வந்த சில நாள்களிலேயே மரணத்தைத் தழுவியர் பலர்.
உலக வரலாற்றில் கருஞ்சட்டைத் தோழர்களின் இந்தப் போராட்டத்துக்கு நிகரானது வேறு ஒன்றும் இருக்கவே முடியாது!
சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? இந்தக் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

Posted by போவாஸ் | at 8:02 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails