வருகிறார் இன்னொரு அரசியல் 'வியாதி'

வருகிறார் இன்னொரு அரசியல் 'வியாதி'


இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபடும்,ஓடாகா தேயும்,பக்கம் பக்கமாக அறிக்கை விடும் பழ.நெடுமாறன், திருமாவளவன், வைகோ, ராமதாஸ், விஷ(ய)காந்து குரூப்பில் புதிதாக அரசியல்வாதி என்ற அரிதாரத்தைப் பூசி ஒட்டிக் கொள்ள துடிக்கிறார் 'நாம் தமிழர் இயக்கத்தின் சீமான்'.
புத்தரைப் போன்று திடீரென்று "ஞான உதயம்" அடைந்த சீமான் இலங்கைத் தமிழர்களைப் பற்றியும், இந்தியாவில் தடை செய்யப்பட இயக்கமான விடுதலைப் புலிகள் பற்றியும் கூப்பாடு போட்டுக் கொண்டு இருக்கிறார்.

இபொழுது இவ்வளவு அக்கறை காட்டும் சீமான், இத்தனை காலம் எங்கிருந்தார் ?, என்ன செய்தார்? அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? என்று அவரிடமும், அவரைத் துதிபாடிக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டாலும்...ஒரு பதிலும் வராது.அவர்களுக்கும் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

முதலில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார், பின்னர் இலங்கை தமிழர்களுக்காக பேசினார், நாம் தமிழர் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார், தற்போது  நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார் சீமான். நேற்று திருவண்ணமலையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். வழக்கமான தன் எழுச்சி உரைக்கு பின் உணர்வாளர்களுடன் கலந்தாய்வு நடத்தினார்.  அப்போது நாம் தமிழர் இயக்கத்தை வரும் மே17ல் அரசியல் இயக்கமாக மாற்றபோகிறேன் என்றும், திமுக, அதிமுக கட்சிகளை தேர்தலில் எதிர்த்து வெற்றி பெறுவேன் என்று அறிவித்துள்ளார். அப்போ பிற கட்சிகள் எல்லாம் ஒழுக்கத்திற்கு விருது வாங்கிய கட்சிகளா ?

அரசியல் என்னும் சாக்கடையில் இவரும் மூழ்கி முத்து எடுக்க ஆசைப் படுகிறார். ஒரு இனத்திற்காக, மக்களுக்காக பாடுபடுவதற்கு, போராடுவதற்கு, ஜெயம் என்ற வெற்றியை அடைவதற்கு அரசியல் பின்னணி அவசியமா ?.
அரசியல் கட்சி என்ற பலம் தேவையா ?
மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தியடிகள் முதலான எண்ணாற்ற தலைவர்கள் அரசியல் பின்னணி இல்லாதவர்களே. அவர்கள் எப்படி போராடி ஜெயித்தனர் ?.

"இனி அடிக்கு அடி, உதைக்கு உதை தான்...தைரியமுள்ளவர்கள் என் இயக்கத்தில் சேருங்கள் என்ற கோரிக்கையும் வைத்திருக்கிறார் சீமான்.". இது வன்முறையை தூண்டும் பேச்சு. அடிக்கு அடி உதைக்கு உதை என்றால் இவருக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன வித்தியாசம், இவருக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?.இது தான் தீர்வா ?. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களையும் ஈழத் தமிழர்களைப் போல எல்லாம் அவஸ்தைகளையும் பட்டு நடுத்தெருவில் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறாரா ?. ஆரம்பம் அமர்க்களப்படலாம்..ஆனால் முடிவு அதோகதிதான். 

உண்மையில் சீமானுக்கு தமிழ், தமிழர், தமிழ் கலாச்சாரம் மீது அக்கறை இருந்தால், முதலில் அனைவரையும், அனைத்துக் கட்சியினரையும் ஒன்றிணைத்து பின்னர் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முயற்சிக்க வேண்டும். "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்ற ஒரு வரி பழமொழி உணர்த்தும், அதனின் அர்த்தம் சீமானுக்கு தெரியாமல் இருக்காது.

அதைவிட்டுவிட்டு அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று சொல்வதும், திமுக, அதிமுகவை தேர்தலில் வெல்வேன் என்று கூறுவதும் தேவையற்றது. இவரது இது நாள் வரையிலான நடிப்பு, திட்டம், எண்ணம் தற்போது வெளிப்பட்டுவிட்டது.தானும் பிற அரசியல்வாதிகளை போல் தான்,   அவர்களைப் போல் வரவேண்டும் என்ற ஆசையும் அவருக்குள் துளிர்விட்டு, இப்பொழுது மலர்ந்திருக்கிறது.

தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும் என்பது பெரியார் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவோம் என்று வீர வசனம் பேசும் இவர்., தீபாவளி தமிழர் பண்டிகையல்ல...வரலாற்றிலும், தமிழ கலாச்சாரத்துடன் கூடிய பண்டிகையல்ல என்று தங்கள் தொண்டர்களுக்கு, துதிபாடுபவர்களுக்கு, நம்புகிறவர்களுக்கு, தமிழ் மக்களுக்கும் எடுத்து கூற மனமில்லை. தீபாவளியைக் கொண்டாடீதீர்கள் என்று ஒரு அறிக்கை விட கூட தைரியமுமில்லை. 
இவரா பெரியாரைப் பின்பற்றுபவர் ?. 
இவரா தமிழ், தமிழர், தமிழ் கலாச்சாரத்துக்கு குரல் கொடுப்பவர் ?

இவரையும் நம்பி சில பேர் வேலை வெட்டியை விட்டு விட்டு இவர் பின்னால் செல்வதுதான் வேதனையிலும் வேதனை.
ஒற்றுமையில்லாத தமிழனும், தமிழினத் தலைவர்களும் இருக்கும் வரை கடவுளே வந்து போராடினாலும் ஒரு பிரயோஜனமுமில்லை.

Posted by போவாஸ் | at 2:23 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails