தீபாவளியும் மூடநம்பிக்கைகளும்

தீபாவளியும் மூடநம்பிக்கைகளும்
user posted image
தீபாவளி என்றதுமே மனதிற்குள் ஒரு விதமான உற்சாகமும் குதுகலமும் நமக்கு ஏற்படும். விடியற்காலை எழுந்து, தலையில் எண்ணெய் தேய்த்து, நன்கு தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, பகாரங்களை அண்டை வீட்டாருடன் நட்போடு பரி மாறிக் கொள்வதும், வண்ண மயமான வான வேடிக்கைகள் வெடித்து வெடிப்பது, புது திரைப்படங்களைப் பார்ப்பது, இப்படி பல நிகழ்வுகள் மூலம் நமது சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்கிறோம்.
சரி 'தீபாவளி'யை ஏன் கொண்டாடுகிறோம் ?.
தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நம் நாட்டில் ஏராளமான (கட்டு)கதைகள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு (கட்டு)கதையை தங்கள் பேரக் குழந்தைகளுக்கு பாட்டிகள் சொல்லி வருகிறார்கள். 
நம் ஊரில் தாத்தா, பாட்டிகள் முதல் அனைவரும் சொல்லும் ஜெனரல் கதை 'நரகாசுர வதம்'.


பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன்! நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாதுன்னு பிரம்மனிடம் வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கீட்டோம்ங்கிற தைரியத்துல அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களை பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.


எப்படிப்பட்ட தொல்லைன்னா ராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்சவிளக்குகளை வீட்டில் வைத்தவர்களின் தலைகளைக் கொய்தான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான் கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கிருஷ்ணரும் நரகாசுரனை அழிக்கிறேன் என்று சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொன்னார்.


பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துச் சண்டை போடுறதுன்னு முடிவு செஞ்சார் பகவான் கிருஷ்ணர். சண்டை ஆரம்பிச்சுச்சு. போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடையிற நிலைக்கு ஆளாயிட்டார். இதனால் கோபமான சத்தியபாமா, நரகாசுரனோட சண்டை போட்டு அவனை வெட்டி வீழ்த்தினாங்க.


நரகாசுரன் சாகிறதுக்கு முன்னாடி தன் தாயிடம் ஒரு விண்ணப்பம் செஞ்சான். எனக்குச் சாவு வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள் வெளக்கேத்தி சந்தாஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான்.


பூமாதேவி நரகாசுரனின் கோரிக்கையை நிறைவேத்துறதா ஒத்துக்கிட்டாங்க. அதனால நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன் இறந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத் திருவிழாவாக.... 
தீபத்திருவிழாவாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.


வட நாட்டில்:
வட நாட்டிலோ, 14 ஆண்டுகள் வன வாசத்திலிருந்து ராமரும், சீதையும் நாடு திரும்பும் நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர். வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். ராமர்சீதா தேவியை வரவேற்க இந்த விளக்குகள் என்பது ஐதீகம்.
மேலும் தீபாவளியை பொதுவாக ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஐந்து நாட்களிலும் விரதமும் இருக்கிறார்கள்.
குஜராத்: 
குஜராத்திலோ, லட்சுமி பூஜையாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் கொழிக்க வேண்டும் என்று லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் தீபாவளி என்கிறார்கள் மார்வாரி சமூக மக்கள்.
சிங்கப்பூர்:
துர்கா தேவி மகிசாசுரனை வதம் செய்தழித்த நன்னாளே தீபாவளித் திருநாள் என்று சொல்வதும் உண்டு.


இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கட்டுக் கதைகளைக் கூறுவதுண்டு.


கேள்வி என்னவென்றால், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்றதற்காக நாம் தீபாவளியைக் கொண்டாடுகிறோம் என்றால்...நாம் வருடத்தின் அனைத்து நாட்கள் முழுவதும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும்.


புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்படும் ஹிரண்யன், ஹம்சன், ராவணன், இடும்பன், பகவன், ஹிரன்யச்சதா, அன்டாகசுரர் உள்ளிட்ட பல அரக்கர்களையும் இறைவனால் கொல்லப்பட்டவர்களே அல்லது அழிக்கப்பட்டவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் அழிக்கப்பட்ட நாட்களிலும் நாம் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் அல்லவா?. ஆனால் இல்லையே ?. - 


உண்மையில் தீபாவளி என்றால் என்ன, ஏன் கொண்டாடுகிறோம் ?.


நரகாசுரனை அழித்து விட்டதால் மட்டும் நம் வாழ்வில் ஒரு ஒளி பிறந்துவிட்டதா?. தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் துளியும் சம்பந்தமில்லை. நரகாசுரன் வெறும் கதை மட்டுமே. வரலாறு அல்ல.


நமது மனதில், எண்ணங்களில், சிந்தனைகளில், பேச்சுக்களில், பார்வைகளில், செயல்களில் அசுரன் இன்னமும் குடி கொண்டிருக்கிறானே.வறுமையிலும், பசியிலும், பட்டினியிலும்,  சுகவீனங்களிலும், துக்கங்களிலும், துயரத்திலும் நம்மை வாட்டி வதக்கிக் கொண்டிருக்கிறானே.
கோபம், பொறாமை, அழுக்கு, புகைப்பது, குடிப்பது, ஆபாசப் பேச்சுகள், பார்வைகள், வக்கிர புத்திகள், ஏமாற்றுவது, புறங்க்கூருவது, பாலியல் வக்கிரமங்கள், சுய நலம், திருட்டு, வரதட்சணை இன்னும் பல நம்மில் ஒழிந்து கொண்டு குடியிருக்கும் அசுரனின் செயல்பாடுகள் அல்லவா ?.


உண்மையில் நரகாசுரன் என்ற மாபெரும் அசுரனை விட பெரிய அசுரன் நமது கண்களையும், எண்ணங்களையும், சிந்தனைகளையும், மனித நேயங்களையும் இருட்டடிப்பு செய்து நம் புத்தியை பகுத்தறிவு இல்லாமல் பேதலிக்கச் செய்த அசுரன்தான்.


ஒரு அறையின் இருட்டை போக்க எப்படி வெளிச்சம் தேவை படுகிறதோ, அது போல், நம்மில் இருக்கும் இருட்டு என்ற அசுரனை ஒழிக்க, அழிக்க 'ஞான ஒளி' 'அறிவு ஒளி' 'உண்மை ஒளி' என்ற வெளிச்சம் தேவை படுகிறது. அறையில் இருக்கும் இருட்டை போக்க தீபத்திலான விளக்கின் மூலம் வெளிச்சம் வந்தது. இந்த தீபத்தினால் ஒளியைப் போல நம்மில் இருக்கும் இருட்டை போக்க வேண்டும் என்று உவமையாகக் கூறப் பட்டது. 'தீப ஒளி' என்றும் அழைக்கப்பட்டது.


'தீப ஒளி' என்பதே காலப்போக்கில், பேச்சு வழக்கில் 'தீபாவளி' என்றானது. நம் மனதில் இருக்கும்அந்த வெளிச்சம் கடவுளைக் குறிக்கின்றது என்று அகஸ்தியர், தாயுமானவர், மற்றும் எண்ணற்ற சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். கல்லும் மண்ணும் வெறும் கல்லும் மண்ணும்தான் என்று கூறியிருக்கின்றனர்.


அக்காலத்தில் அடக்கு முறை அதிகாரங்களையும், ஆணவங்களையும், நாங்கள் சொல்வதுதான் நீதி, உண்மை என்று உரைத்துக் கொண்டிருந்த பிராமணர்கள் அதயெல்லாம் மறைத்து கல்லையும் மண்ணையும் வழிபடச் செய்து தீபாவளியைக் கொண்டாடும்படி வற்புறுத்தினர், வரலாற்றினை மாற்றி எழுதினர்.அமைத்தனர். இவையெல்லாம் 1000 வருடத்திற்கு முன்புதான் நடந்திருக்க வேண்டும். எனென்றால் நம் பழந்தமிழ் இலக்கியங்களில் தீபாவளி என்றொரு பண்டிகையைப் பற்றி ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை.


ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்த்துவம் முதலான அனைத்து மதங்களும், மதங்களுக்குரிய வேதங்களிலும் 'ஒளி - வெளிச்சம்' என்பது கடவுளைக் குறிக்கும் என்றே சொல்கிறது. கடவுளுக்கு கல்லாலும், மண்ணாலும் செய்த உருவம் ஏதும் கிடையாது, அவையாவும் கல்லும் மண்ணும் மட்டுமே என்றும் கூறுகிறது.


ஆனால் பிராமணர்களால் இந்த உண்மை மறைக்கப்பட்டது.அக்காலத்தில் இஸ்லாம் மதமும், கிறிஸ்த்துவ மதமும் நம் நாட்டில் இல்லை. இருந்திருந்தால் நம் மக்களுக்கு உண்மைகள் தெரிந்திருக்கும். தீபாவளி மட்டுமல்ல, இன்னும் பல பண்டிகைகள் கொண்டாடியிருக்க மாட்டோம். உண்மையில் தமிழர்களின் திருவிழா என்றால் பொங்கல் மட்டுமே. ஆனால் காலப் போக்கில் எல்லாம் மாறி இன்று பொங்கலை விட வெகு சிறப்பாய் கொண்டாடுவது தீபாவளியைத் தான்.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீபாவளி தமிழ்நாட்டில் இல்லை. சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக்காலம்வரையில் இருந்ததில்லை. இது வரலாறு.


தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.நம்பிக்கைஉள்ளவர்கள்கொண்டாடுங்கள். குடும்ப சந்தோசத்திற்காக கொண்டாடுகிறவர்கள் கொண்டாடுங்கள். ஆனால் உண்மை தெரிந்து கொண்டாடுங்கள்.


இந்த வருட தீபாவளியிலாவது ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்ளவேண்டும். இறைவனக்கு நன்றியினை முதலில் கூறி, நாம் செய்யும் தவறுகளோ, செயல்களோ, கூறிய பொய்களோ...எதுவாயிருந்தாலும் சரி...வாயினால் அறிக்கையிட்டு இறைவனிடத்தில் மன்னிப்பக் கேட்டு...இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகளையும், பொய்களையும் கூற மாட்டேன், அதற்கு எனக்கு அப்பழுகற்ற நல்ல ஒரு மனதினை, சிந்தனையை, எண்ணங்களை, மன வலிமையை திடத்தினைத் தாருங்கள், நன்மை தீமை அறிந்துகொள்ளக்கூடிய பகுத்தறிவினைத் தாருங்கள், நாலு பேருக்கு நன்மை செய்யக் கூடிய சூழ்நிலைகளைத் தாருங்கள்  என்று வேண்டிக் கொள்ளவோம்.


உலகின் முடிவு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஓரளவாது உண்மையுடன் இருக்க முயற்சிப்போம்.


தீபாவளி நாளில் புத்தாடை, வண்ணமயமான வான வேடிக்கை வெடிகள், பலவகையான பலகாரங்களுக்கு செலவழிப்பதில் ஒரு சதவீதம் ஏழை எளியோருக்கு, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் யாரேனும் ஒருவருக்கு நம்மால் முடிந்த உதவி செய்தால் மனித நேயம் மலரும், அவர்களது வாழ்க்கையில் ஒரு ஒளி பிறக்கும். 


நம் மனதிலும் ஒரு ஒளி பிறக்கும்.
ஏன்...தீபாவளியை ஐப்பசி மாதம் கொண்டாடுகிறோம் ?....தொடரும்.

Posted by போவாஸ் | at 5:54 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails