மீனவர் சட்டம் - ஜெயலலிதா சொல்வது சரியா? : முதலமைச்சர் கலைஞர் விளக்கம்.


மீனவர்கள் தொடர்பான சட்டம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் தகவல்களை மறுத்து முதல் அமைச்சர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழகத்திலே உள்ள அனைத்துக் கிராமங்களிலும் தனது கட்சிக்காரர்களை விட்டு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி முடித்துவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா வரும் 18 ஆம் தேதி டில்லியிலே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் மீனவர்களுக்கு விரோதமான கடல் மீன் தொழில் ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை வரைவு சட்ட முன் வடிவை எதிர்த்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போகிறாராம்.

மீனவர்களுக்கு விரோதமாக இப்படியொரு மசோதாவை மத்திய அரசு கொண்டு வரப் போவது தெரிந்த உடனேயே நவம்பர் 19 ஆம் தேதியன்றே தமிழக அரசின் சார்பில் மத்திய அமைச்சர் சரத் பவார் அவர்களுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறேன்.
அந்தக் கடிதத்தில் கடல்சார் மீன்வளம் (முறைப்படுத்தல் மற்றும் நிருவாகம்) நகல் சட்டம் 2009 குறித்து தமிழக மீனவர்களின் அய்யப்பாடுகளையும் அச்சத்தையும் மத்திய வேளாண்துறை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் சரத் பவார் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததோடு, இந்தப் பிரச்சினைகள் குறித்து மீன் பிடி தொழிலிலே தொடர்புடையவர்களோடு விரிவாகக் கலந்து பேசிய பிறகுதான் அனைத்தையும் உள்ளடக்கிய முற்போக்கான சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தேன்.
மத்திய அமைச்சர் சந்திப்பு

ஜெயலலிதா அறிக்கையிலே நான் கடிதம் எழுதியதோடு என்னுடைய எதிர்ப்பு நாடகத்தை முடித்துக் கொண்டேன் என்று அவருக்கே உரிய பாணியில் எழுதியிருக்கிறார். அதுவும் தவறான செய்தி. கடிதத்தை எழுதியதோடு நின்றுவிடவில்லை. மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவர்களைத் தொடர்பு கொண்டு, உடனடியாக மத்திய அமைச்சர் சரத் பவார் அவர்களைச் சந்தித்து மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசுமாறு பணித்தேன்.
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் உடனடியாக டிசம்பர் 10 ஆம் தேதியன்று மத்திய அமைச்சர் சரத் பவார் அவர்களைச் சந்தித்து மீனவர்களின் நிலைமைகளை விளக்கியிருக்கிறார்.
கொண்டு வர உத்தேசித்த மசோதாவின் காரணமாக மீனவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதையும் விரிவாக மத்திய அமைச்சரிடம் சொல்லியிருக்கிறார். இப்பிரச்சினை குறித்து சரத்பவார் அவர்களுக்கு நான் எழுதிய கடிதம் பற்றியும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். 
அத்தனையையும் கேட்டு விட்டு, மத்திய அமைச்சர் தமிழக மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம், தமிழக முதலமைச்சரின் கோரிக்கைப்படி, கடல் மீன் பிடி ஒழுங்குமுறை மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்ய மாட்டோம். இந்த மசோதா பற்றி அனைத்து முதல்வர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகளின் கருத்து கேட்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.
இந்தச் செய்தி 11 ஆம் தேதிய அனைத்து ஏடுகளிலும் பெரிதாக வெளி வந்துள்ளது. இத்தனை செய்திகளையும் தெரிந்து கொண்டு எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா இது மீனவர்களை ஏமாற்றும் செயல் என்றும், இதற்காக டில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிக்கின்றார் என்றால் உண்மையில் மீனவர்களை ஏமாற்றுகின்ற செயல் எது, ஏமாற்றுகின்றவர் யார் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
நவம்பர் மாதம் மசோதா வரப்போகிறது என்று தெரிந்ததும் நவம்பர் 19 ஆம் தேதியன்றே நான் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் ஜெயலலிதா இந்த ஒரு மாத காலமும் சும்மாயிருந்து விட்டு தற்போது திருச்செந்தூர் இடைத் தேர்தல் என்றதும், அங்கேயுள்ள மீனவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக டில்லியிலே ஆர்ப்பாட்டம் என்று அறிக்கை விடுகிறார். ஆனால் மீனவப் பெருமக்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியும்.
இவ்வாறு முதல்வர் கலைஞர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Posted by போவாஸ் | at 2:18 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails