தில்லியில் விஜயகாந்தின் உண்ணாவிரத நாடகம் - ஓர் அலசல்


ராமேஸ்வரம் கடற்பகுதியில், 16ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 21 பேரை, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி கட்டையால் தாக்கி கடத்தியுள்ளனர்.

மீனவர்களின் படகுகளைசேதப்படுத்தியும், வலைகளை அறுத்தும், மீன்பிடி சாதனங்களை கடலில் எறிந்தும் காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளனர்.இலங்கை அரசுடன், மத்திய அரசு 1974ல் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தமே இத்தனை சிக்கல்களுக்கும் காரணம்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துகிறது என்றால், தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்று கருதுகிறதா? இலங்கை அரசின் போக்கு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே பறித்துவிட்டது. கடலோர மீனவர்கள் என்ற இனத்தையே அழித்து வருகிறது.

முதல்வர் கருணாநிதி அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், இலங்கை அரசிற்கு கண்டனம் தெரிவிப்பதுமான கண் துடைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

மத்திய அரசோ தமிழக மக்களைப் பற்றி சிறிதுகூட அக்கறையில்லாமல் மெத்தனப் போக்கை கையாண்டு வருகிறது. தே.மு.தி.., சார்பில், எனது தலைமையில், டில்லியில் வரும் 29ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நிஜமாகவே இவர் தமிழக மீனவர் மேல் உள்ள அக்கரையில் தில்லியில் உண்ணாவிரதம் இருக்க போகிறாரா அல்லது உண்ணாவிரதம் என்ற நாடகத்தினை அரங்கேற்ற போகிறாரா ?

விஜயகாந்த் உண்மையில் முழு மனதுடன் தமிழக மீனவர்களுக்காக இந்த உண்ணாவிரத போராட்டம் மூலம், மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தால் மிக்க சந்தோஷம். வாழ்த்துவோம், வரவேற்போம்.

ஆனால், இந்த விஷயத்தில் எதோ உள் அர்த்தம் இருப்பது போல தெரிகிறது. இவரது அறிக்கையில் இரண்டு விஷயங்கள் முரண்பாடாக இருக்கிறது.
ஒன்று உண்ணாவிரதம் இருக்கப் போகும் தேதி.- செப்.29. ,
மற்றொன்று - உண்ணாவிரதம் இருக்கப் போகும் இடம் -
தில்லி .



இடம் - தில்லி.

22 நாட்களாக தொடர் போராட்டத்தில் மீனவர்கள் இருந்தபோது, இவர் பெரிய அளவுக்கு அறிக்கைகளோ, போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ ஏதும் செய்யவில்லை.

ஏனென்றால்
அந்த நாட்களில் இவர் சிந்தித்துக் கொண்டு இருந்தது, அக்கறை எடுத்துக் கொண்டது பனையூர் கொலை வழக்கு, விஜய் - ராகுல் சந்திப்புக்கு பின் பேசப்பட்ட பேச்சுகள் என்னவாக இருக்கும்?, விஜயின் முடிவென்ன? ராகுலின் மூன்று நாள் தமிழக சுற்றுப் பயணம்,அதற்கு பின் அரங்கேறுவது என்னவாக இருக்கும் என்பதை பற்றித்தான் இருந்திருக்க வேண்டும்.

மேற்கூறிய எல்லாப் பிரச்சனைகளும் புயலைப் போல சீறி வந்து இப்பொழுது ஓய்ந்து விட்டது.

22 நாட்களாக மீனவர்கள் தொடர் போராட்டம் செய்த பொது இவர் எங்கே போனார். ஏன் அப்பொழுது இதைப் பற்றி பேசாத இவர் இப்பொழுது பேசுகிறார்.
நெருப்பில்லாமல் புகையுமா? இதற்கு காரணம் இருக்கிறது.

விஜய் ராகுல் சந்திப்பாலும், ராகுலின் வருகையாலும் சற்றே அதிர்ந்து போயிருந்தார் விஜயகாந்த். ராகுல் வந்துவிட்டு திரும்பும் வரை இவருக்கு பக்கு பக்கு என்றுதான் இருந்திருக்க வேண்டும்.

ராகுல் வந்தார்...சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ரஜினிகாந்தும், விஜயும் தங்கள் கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என்று சொன்னார். இதனால் மேலும் கலக்கமடைந்தார் விஜயகாந்த். அமைதியாக இருந்துகொண்டு, நடப்பதை கூர்ந்து கவனித்தார்.

ராகுல் தில்லி திரும்பிய மறுதினம் ரஜினிகாந்த் அரசியலில் இப்பொழுது ஈடுபடப் போவதில்லைஎன்று அறிக்கைவிட்டார்.

அதைத் தொடர்ந்து விஜயும் இப்போதைக்கு அரசியல் வேணாங்கனா என்று ஒதுங்கிக் கொண்டார்.

இந்த அறிவிப்புகளால் தற்போது உற்சாகமாக இருக்கிறார் விஜயகாந்த்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இவர் சார்பாக சுதீசும், பண்ருட்டி ராமச்சந்திரனும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள, காங்கிரஸின் மேலிடத்தை பார்ப்பதற்கு அவசரமாக தில்லி சென்று திரும்பினர். பின்னர் தனித்து நிற்கிறோம், மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்றனர். ( கூட்டணி பேரம் படியவில்லை என்று பத்திரிக்கைகளில் வெளிவந்தது)

காங்கிரஸில் விஜயும், ரஜினியும் சேர மாட்டார்கள் என்று நிச்சயமான இன்றைய சூழ்நிலையில் இவர் மீண்டும் காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயாராகிறார், அதற்கேற்ப காய் நகர்த்துவது போல தெரிகிறது.

நானும் ஒரு பெரிய கட்சியின் தலைவன், எனக்கும் ஆட்கள் உண்டு, என் பின்னால் லட்சக்கனக்கனோர் உண்டு என்று காங்கிரஸ் மேலிடம் அறிந்துகொள்ளும்படி தன்னுடைய பவரைக் காட்டுவதற்காகவே இவர் தில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்.

இவர் தில்லியில் உண்ணாவிரதம் இருக்கும் போது தன் தொண்டர்களை தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் உண்ணாவிரதம் இருக்க சொல்லுவார். சொல்லவில்லை என்றாலும் இவர் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள்.(அப்படி ஒரு பாசம்)
காங்கிரசைக் கூப்பிட்டு, பாருங்கள் என் பவரை என்று காட்டுவார்.

இதனால், அடுத்து வரும் சட்ட மன்றத் தேர்தலுக்கு காங்கிரசுடன் கூட்டணி சேரும் வாய்ப்பைத் தானாகவே வழிய போய் உருவாக்கப் போகிறார்.
இன்னும் அதிக பப்ளிசிட்டி கிடைக்கும். அது இவருக்கு மேலும் உபயோகமாக இருக்கும். (ஒரு வேளை காங்கிரசுடன் கூட்டணி அமையலாம்.)

இந்த காரணங்களுக்காகவே இவர் தில்லியில் உண்ணாவிரதம் இருக்க போகிறார்.

நாள்: செப். 29

செப்.29 அன்று ஏன் உண்ணாவிரதம் நடத்த வேண்டும் ?.
பொதுவாக
தமிழா நாட்டிலேயே இது போன்ற உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் முன்கூட்டியே தகுந்த அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

இவர் உண்ணாவிரதம் நடத்தபோவதோ இந்தியாவின் தலைநகர் தில்லியில். ஆக, தமிழகத்தில் அனுமதி பெற இரண்டு நாட்கள் தேவை என்றால் தில்லியில் குறைந்தது ஆறு நாட்களாவது தேவைப்படும். அதன் பின்னரே உண்ணாவிரதம் நடத்த முடியும். அனுமதி பெற வில்லையென்றால்...சட்டப்படி கைது செய்வார்கள்.

அனுமதி வாங்க காலதாமதம் ஏற்படும் என்று விஜயகாந்துக்கு தெரியாதா என்ன?...அதனாலேயே இவர் தன் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றிலிருந்து சரியாக 10 நாட்கள் கழித்து, 29 ந் தேதி என்று அறிவித்திருக்கிறார். அதற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கூறியிருக்கிறார்.

இன்று முதல் நம் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறத்தப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

உண்மையாகவே இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு அக்கறை இருந்தால் தமிழகம் முழுவதும் உள்ள தன் தொண்டர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி தமிழக அரசுக்கு நெருக்கடி தந்திருக்கலாம்.

தி.மு.கவின் எதிர்கட்சிகள் அனைத்தையும் அழைத்து ஒன்றாக குரல் எழுப்பி போர்க் கோடி தூக்கி மீனவ மக்களுக்கு ஆதரவாக செயல் பட்டிருக்கலாம்.
ஏன், தி.மு.கவியும் சேர்த்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம்.

இதன் மூலம் ஒரு நிரந்தரத் தீர்வு காண ஒரு வழிவகை செய்திருக்க முடியும்.

ஆனால் இவரது எண்ணம் அதுவல்ல.

முழுக்க முழுக்க இவரது சுய நலத்திற்காகவே, அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே தன் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
இதற்காக இவருக்கு கிடைத்துள்ள ஆயுதம்தான் தமிழக மீனவ மக்களின் பிரச்சனை.

கடந்த சில வருடங்களாகவே தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப் பட்டு வருகின்றனர். இவர் கட்சி ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இது வரை மீனவர்களுக்காக எத்தனை முறை போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடத்தியுள்ளார் ?

செப்.29 முன்பு ஒரு சுமூக தீர்வு காணப்பட்டுவிட்டால் இவர் கதை என்னவாகும். எந்த காரணத்திற்காக உண்ணாவிரதம் இருப்பார் ?.

ஈழத்தமிர்களுக்காகவா ? இருந்தால் சந்தோஷம். ஆனால், அந்த அளவுக்கு தில் இவருக்கு இருக்கா ?

இவரு உண்மைலேயே உத்தமர், நேர்மை தவறாதவர், சிறந்த அரசியல்வாதி என்றால் தினம் தினம் ஒரு உண்ணாவிரதமும், போராட்டமும் நடத்த வேண்டி இருக்கும். அந்த அளவிற்கு நம் நாட்டின் நிலை உள்ளது.

"
நான் சொல்றதை செய்பவன்" என்று கூறும் இவர், கலைஞரின் செயல் பாடுகளை வெறும் கண்துடைப்பு என்று விமர்சிக்கும் இவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்.

ஒரு வேளை இவரெல்லாம், ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வர் ஆகிவிட்டால்...நமக்கு அதோ கதிதான்.

தொடர்ந்து இவரது செயல்பாடுகளைக் கவனித்து வந்துதான் இதைஎழுதியுள்ளேன்.

ஜப்பான் காரன் வேளை செஞ்சே கெட்டான்,
அமெரிக்க காரன் அதிகாரம் பண்ணியே கெட்டான் ,
இந்தியாக் காரன் பேசியே கெட்டான் என்று சொல்வதுண்டு.

அது விஜயகாந்தின் விஷயத்தில் உண்மையாகும் நாட்கள் வெகு தூரமில்லை.

Posted by போவாஸ் | at 1:44 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails