சசிகலா - பிரேமலதா புதிய கூட்டணி !!

மிழக அரசியல் களம் சற்றே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. காரணம்... நெருங்கும் 2011 தேர்தல். இந்த முறை விட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வனவாசம்தான் என்ற அச்சம் இருப்பதால், கட்சிகளிடையே கூட்டணியைப் பலப்படுத்த கடும் போட்டி. குறிப்பாக அ.தி.மு.க.வின் கூட்டணி கூட்டல், கழித்தல்கள் `அக்மார்க்' ரகம்.

`அதன் முதல்படிதான் பா.ம.க.வை கூட்டணியை விட்டு வெளியேற்றியது!' என `பஞ்ச்'சிங்காகப் பேசுகிறார்கள். `தேர்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவரங்களிலும் அக்கட்சியின் செல்வாக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அதனால்தான் தேவையற்ற சுமையை எதற்கு சுமப்பது என்று அம்மா கழற்றிவிட்டுவிட்டார்!' என பா.ம.க. நீக்கத்துக்கு புதுவிளக்கம் கொடுக்கிறார்கள் அவர்கள்.

ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து சென்னை வந்ததும் அவரை முதலில் சந்தித்தது வைகோதான். அதனால் கூட்டணியில் ம.தி.மு.க. இருப்பதை அந்தச் சந்திப்பின்மூலம் ஜெயலலிதா உறுதிப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

மறுபுறம், `வந்தால் வரவில் வைப்போம்' என்கிற ரீதியில் இருப்பது கம்யூனிஸ்ட்டுகள்தான்.  அதனால் ம.தி.மு.க.வை மட்டும் வைத்துக்கொண்டு வரும் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்று நினைக்கும் அ.தி.மு.க. தலைமை `எதிரிக்கு எதிரி நண்பன்...' என்கிற முறையில் புதிய கட்சியுடன் கூட்டணிக்கு அச்சாரம் போடுவதாகச் சொல்லப்படுகிறது. அது... `தே.மு.தி.க.'

ஜெயலலிதா கொடநாட்டில் த
ங்கி இருந்தபோதே இந்தக் கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதற்கு முக்கிய காரணகர்த்தா சசிகலா எனச் சொல்லப்படுகிறது. அதாவது தெரிந்தோ, தெரியாமலோ அ.தி.மு.க. வாக்குகளை பெருமளவில் பிரிப்பது தே.மு.தி.க.தான். கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணி தோற்றதற்கு இந்த விஷயம்தான் முக்கிய காரணம். அதனால் வாக்கு வங்கியே இல்லாத கட்சிகளைக் கூட்டு சேர்ப்பதைவிட, தமிழகம் முழுவதும் நன்கு அறிமுகமான தே.மு.தி.க.வோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு? என்று `ஜெ'வுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கேள்வி எழுப்பியதாகவும், தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில், `ஜெ' சமாதானம் அடைந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.

அதைத் தொடர்ந்துதான் `உயிர்த்தோழி சசிகலாவும். `கேப்டனி'ன் மனைவி பிரேமலதாவும் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டதாகவும்' இதற்கு பிரேமலதாவை சம்மதிக்க வைத்துவிட்டதாகவும்  தகவல்கள் அலை அடிக்கின்றன. அதன்படி தேர்தலின்போது கணிசமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்குவது, தென் மாவட்டங்களிலிருக்கும் குறிப்பிட்ட இன மக்களின் வாக்குகளைப் பெற ஒத்துழைப்பது, நிதிப் பிரச்னைகளை பார்த்துக் கொள்வது போன்றவை பேச்சில் முக்கிய இடம் பிடித்ததாக சொல்கிறார்கள்.

தொடர்ந்து தே.மு.தி.க.வுக்கு ஆட்சியில் பங்கு, அதாவது முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ள பதவி, மந்திரி சபையில் இடம்... என்கிற தகவலும் தோட்டத்திலிருந்து சொல்லப்பட்டதாம்.  `2011 எங்களது இலக்கு. அதற்கு அடுத்து நீங்கள் ஆட்சிக்கு வரலாம். எங்களுக்கு பிரச்னை இல்லை' என்று சொல்லப்பட்டதாம். ஆனால் அதற்கு கேப்டன் தரப்பிலிருந்து பச்சைக் கொடி காட்டப்படவில்லையாம். அதனால் இதுதொடர்பாக பிரேமலதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே செல்வதாகவும் கூறப்படுகிறது.

ஆளுங்கட்சி வட்டாரத்தில் `கிலி' கிளப்பி இருக்கும் இந்தத் தகவல், அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளின் தொண்டர்களிடத்தில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள். `எப்படி?' என்ற கேள்விக்கு, `தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லித்தான் வாக்குகள் கேட்கிறார். எங்களுக்கும் எம்.ஜி.ஆர்.தான் தலைவர். அதனால் இரண்டு கட்சிகளுமே கூட்டணி சேர்வது தி.மு.க.வுக்கு பாதகம்தானே!' என்று `லாஜி'க்காகப் பதில் சொல்கிறார்கள்.

`தமிழக அரசியல் களத்தில் இப்படி ஒரு புதிய கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?' என்பது குறித்து அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர் ஒருவரிடம் கேட்டோம்.

``அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை!' இருந்தாலும் இப்போதே கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடப்பதாகச் சொல்வது பற்றி தெரிவிக்க எனக்கு அதிகாரம் இல்லை'' என `நாசூ'க்காக மறுக்கிறார்.

சரி! `2011-ல் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்' என்று சொல்லிவரும் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா? என்பது பற்றி தே.மு.தி.க. பெரிய தலைவர் ஒருவரிடமும் கேட்டோம்.

``2011 அல்லது அதற்கு முன்பே தேர்தல் நடந்தாலும் தே.மு.தி.க. அதனை சந்திக்கத் தயாராக உள்ளது.  கடந்த எம்.பி. தேர்தலின்போது காங்கிரஸ் எங்களுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தி.மு.க. இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் எனச் சொல்லிவிட்டோம். அதனால் வரும் 
சட்டமன்றத் தேர்தலில் நிலைமையைப் பொருத்து கூட்டணி அமைப்போம். எந்தக் கட்சியுடன் என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது!'' என்று சொல்லும் அந்தத் தலைவர் `அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறதா?' என்ற கேள்விக்கு புன்சிரிப்பை மட்டும் உதிர்த்தார்.

`சசிகலாவும் பிரேமலதாவும் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணிக்கு இப்போதே கைகோர்த்துவிட்டதாகவும், கேப்டனின் `ஓகே.'வுக்காக காத்திருப்பதாகவும் உங்கள் கட்சியிலிருந்து பேச்சு கசிகிறதே?' என்ற கேள்விக்கு ``அதை சம்பந்தப்பட்டவர்களிடம்தான் கேட்கவேண்டும்!'' என்கிறார் சற்று இறுக்கம் கலந்த குரலில்!.

நன்றி:குமுதம்.


ஒரு சின்ன பிளாஷ் பேக் :



11 Aug 2009 ‘தே.மு.தி.க., கட்சி, அ.தி.மு.க., ம.தி.மு.க.,வுடன் இணைந்து தமிழகத்தில் தி.மு.க.,வின் அராஜக ஆட்சியை ஒழிக்க பாடுபடும்” என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
தொண்டாமுத்தூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, பிரேமலதா விஜயகாந்த் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பேசியதாவது: தொண்டாமுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருவதற்கான காரணம் யார் என்று அறிந்து, வாக்காளர்கள் ஓட்டுப் போட வேண்டும். போலி அரசியல்வாதிகளை, மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
அ.தி.மு.க., ம.தி.மு.க., வில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை இழுத்து விட்டால், மொத்த தமிழகமும் தி.மு.க.,வுக்கு சென்று விட்டதாக அர்த்தமில்லை.
தமிழகத்தை ஆண்டு வரும் தி.மு.க., அரசு ஆணவத்தின் உச்சியில் இருக்கிறது. அவர்களுடைய அராஜக ஆட்சியை ஒழிக்க தே.மு.தி.க., கட்சி அ.தி.மு.க., ம.தி.மு.க.,வுடன் இணைந்து பாடுபடும்.
தொண்டாமுத்தூர் இடைத் தேர்தலில் தி.மு.க.,வுக்கு தோல்வியை கொடுத்து, அவர்களுடைய ஆட்சி ஒழிப்புக்கு பிள்ளையார் சுழி போட வேண்டும்.இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

Posted by போவாஸ் | at 9:16 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails